பரீட்சை நிலையத்தில் மோதல்: 5 மாணவர்கள் படுகாயம்- விசாரணையின் தந்தை கைது!
வலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்பல்கமுவ மற்றும் பன்னல பிரதேச பாடசாலைகளைச் சேர்ந்த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 5 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அழகியல் பாடத்துக்கான செய்முறைப் பரீட்சையின் இடைவேளையின் போதே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 மாணவர்கள் படுகாயம்
சம்பவம் குறித்து அறிந்த வலப்பனை பொலிஸார், உடனடியாக பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் மற்றும் பரீட்சைகள் ஆணையாளருடன் கலந்துரையாடியுள்ளனர்.

காயமடைந்த 5 மாணவர்களும் தங்களது எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் பரீட்சையைத் தவறவிடக் கூடாது என்பதற்காக, அவர்கள் அழகியல் பாடத்தின் இரண்டாம் பகுதி வினாத்தாளுக்குத் தோற்றுவதற்குத் தேவையான விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மாணவர்கள் பரீட்சையை எழுதி முடித்த பின்னர், பொலிஸாரால் அவர்கள் மீண்டும் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோதலை தூண்டிய தந்தை கைது
இந்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய கும்பல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவரின் தந்தை, மோதலைத் தூண்டிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தற்போது முக்கியமான அரச பொதுத் தேர்வுக்குத் தோற்றி வருவதால், அவர்களின் கல்வி நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு தற்போதைக்கு அவர்கள் கைது செய்யப்படவில்லை.
எனினும், அவர்கள் தொடர்பான விரிவான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்து, பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri