யானையை விரட்ட சென்ற சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி (Photos)
திருகோணமலையில் யானையை விரட்ட சென்ற சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை - கோமரங்கடவல கரக்கஹவெவ பகுதியில் வன இலாக்கா அதிகாரிகளுடன் யானையை விரட்டச் சென்ற போதே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
இச்சம்பவம் இன்றைய தினம் (06.05.2023) காலை இடம்பெற்றுள்ளது.
யானையின் தாக்குதலினால் கோமரங்கடவல -கரக்கஹவெவ பகுதியில் வசித்து வரும் 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆனந்த காமினி வத்தேவெவ என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
யானையை விரட்டுவதற்கு சென்றார்
கோமரங்கடவல ரிதீபுர பகுதியில் கடந்த ஒரு வாரக் காலமாக யானையின் அட்டகாசம் அதிகரித்து வந்த நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இணைந்து கிராம மக்கள் யானையை விரட்டுவதற்குச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் யானை குறித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கியதாகவும் சம்பவ இடத்திலேயே குறித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
விசாரணை
உயிரிழந்தவரின் சடலம் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.