89,000 இலங்கைத் தமிழர்கள் குறித்து மோடியிடம் ஸ்டாலின் முன்வைத்த அவசர கோரிக்கை
இந்திய மாநிலமான தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில், தமிழ்நாட்டில் சுமார் 89,000 இலங்கைத் தமிழர்கள், அகதி முகாம்களிலும், அதற்கு வெளியேயும் வசிப்பதாக ஸ்டாலின் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர், இந்தியாவில் பிறந்தவர்கள் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசா அந்தஸ்து
மேலும், "1983ஆம் ஆண்டு முதல், அடுத்தடுத்த தமிழக அரசாங்கங்கள், மத்திய அரசின் ஒப்புதலுடன், இலங்கையில் பிரிவினைவாத மோதல்களில் இருந்து தப்பி வந்தவர்களுக்கு தங்குமிடம், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை வழங்கியுள்ளன.

இருப்பினும், பலருக்கு இன்னும் குடியுரிமை அல்லது நீண்டகால விசா அந்தஸ்து வழங்கப்படவில்லை. இருப்பினும், நாட்டில் உள்ள ஊடக அறிக்கைகள் இந்தக் குழுவைச் சேர்ந்த 11 பேருக்கு இதுவரை இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றன.
மேலும் அவர்களில் ஒருவர் மட்டுமே வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளார். மீதமுள்ள பத்து பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்” என்பதையும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், மாநிலத் தேர்தல்களுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மாத்திரமே உள்ள நிலையில், இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என இந்திய அரசியல் பரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.