ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து உடன் வெளியேற்றப்பட்ட சீன கப்பல்!
கதிரியக்க பொருட்களைக் கொண்ட சீனக் கப்பல் ஒன்று நேற்று இரவு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசித்தது. எனினும் உடனடியாக துறைமுகத்துக்கு வெளியே செல்லுமாறு கூறப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொண்டநிலையிலேயே துறைமுகத்துக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இந்தக் கப்பல் சீனாவுக்குச் சென்று கொண்டிருந்தபோதே தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டதாக இலங்கை அணுசக்தி வாரியம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கப்பல் துறைமுகத்திற்குள் நுழைந்தபோது அதில் இருந்த பொருட்கள் குறித்து துறைமுக அதிகாரிகளுக்கு தெரியாது என்று இலங்கை அணுசக்தி வாரியத்தின் இயக்குனர் டி.எம்.ஆர்.தென்னக்கூன் தெரிவித்துள்ளார்.
கப்பலில் கதிரியக்க பொருட்கள் உள்ளன என்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கப்பலை துறைமுகத்திற்கு வெளியே நகர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தென்னக்கூன் கூறியுள்ளார்.
அத்துடன் கப்பலில் உள்ள எந்தவொரு பொருளையும் இறக்க வேண்டாம் என்று கப்பலுக்கு அறிவுறுத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார். அதேநேரம் அணுசக்தி வாரியத்தைச் சேர்ந்த ஒரு குழு உடனடியாக ஹம்பாந்தோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் தென்னகூன் தெரிவித்துள்ளார்.
கப்பலில் உள்ள அபாயகரமான பொருட்களிலிருந்து இலங்கைக்கு உடனடியாக எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் அவர் கூறினார். இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு விளக்கமளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் கப்பலில் உள்ள அபாயகரமான பொருட்களிலிருந்து இலங்கைக்கு உடனடியாக எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2017 ஆம் ஆண்டில் எட்டப்பட்ட உடன்படிக்கையை தொடர்ந்து ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நிர்வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.