சீன அமைச்சர்கள் நாட்டை நாசம் செய்யவே வருகின்றார்கள் : சரத் பொன்சேகா
சீன அமைச்சர்களுக்கு வேறு வேலையில்லை, நாட்டை நாசம் செய்யவே வருகின்றார்கள் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
சீன அமைச்சர்களுக்கு அந்நாட்டில் வேலையில்லை. மாதத்துக்கு ஒருமுறை எவராவது சீனாவிலிருந்து இலங்கைக்கு வருகின்றார். பெரிய நாடான சீனாவிலிருந்து கொண்டு இலங்கைக்கு ஏன் இவர்கள் வந்து திரிகின்றார்கள் என தெரியவில்லை.
சீனாவின் வெளி விவகார அமைச்சரை வரவேற்பதற்கு இலங்கையின் வெளி விவகார அமைச்சர் செல்லவில்லை. மாறாக விளையாட்டுத்துறை அமைச்சரே சென்றார். இதற்குக் காரணம் தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்களே.
தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்களுக்காகவே சீனாவின் அமைச்சர்கள் இலங்கைக்கு வருகிறார்கள். யார் வந்தாலும், யார் வரவேற்றாலும் இலங்கையின் மேலுள்ள அன்பால் அவர்கள் எவரும் வரவில்லை. எஞ்சியிருப்பதையும் நாசம் செய்யவே இவர்களை இலங்கைக்கு அழைத்து வருகின்றார்கள்.
நாம் அந்த ஆட்சியிலிருந்தோம். ஆனாலும் தவறுகளுக்குப் பொறுப்புக்கூற முடியாது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெறும்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எம்மிடம் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி இடம்பெறும்போது அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எங்களிடம் ஆலோசனைகளைக் கேட்டா செயற்பட்டார் எனவும் அவர் இதன்போது வினவியுள்ளார்.