இந்தியாவை இந்து சமுத்திரத்தில் கட்டுப்படுத்த ஈழத்தமிழர்களை தம்வசப்படுத்த முற்படும் சீனா
இந்தோ - பசுபிக் பிராந்தியத்தின் அதிகாரவலு சமநிலை போட்டியின் ஆடுகளமாக தமிழன் கடலும் தமிழர் நிலமும் மாறியிருக்கிறது.
இந்த ஆடுகளத்தின் மையப்புள்ளியாக இலங்கைத் தீவில் தமிழர் தாயகமும் அதனை அடுத்து தமிழகமும் முக்கிய கேந்திர பகுதியாக மாற்றப்பட்டு விட்டது. அதனால் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு தமிழர் தாயகப் பகுதி கேந்திர அரசியல் பெறுமானம் மிக்க புவியியல் அந்தஸ்தைப் பெற்றுவிட்டது.
இந்தோ-பசுபிக் கடற் பிராந்தியத்தில் மேற்குலகிற்கும் சீனாவுக்கும் இடையிலான ஆதிக்கப் போட்டியில் இலங்கைத்தீவும், இந்தியாவும் முக்கிய கேந்திரஸ்தானத்தில் உள்ளன.
எனவே வரலாற்று ரீதியாக ஈழத்தமிழரின் புவியியல் முக்கியத்துவம் பற்றியும் இந்தோ - பசுபிக் பிராந்திய கடலாதிக்க வலுச்சமநிலையையும் அதன் பின்னனியையும் நோக்குவது அவசியமானது.
தமிழகத்தையும், ஈழத்தையும் பிரிப்பது பாக்கு நீரிணை. இந்தப் பாக்கு நீரிணை இலங்கைத்தீவில் ஈழத்தமிழரின் கையிலேயே உள்ளது . அத்தோடு அரபிக் கடலையும் வங்கக் கடலான தமிழன் கடலையும் இணைக்கின்ற தொடுகடலான பாக்கு நீரிணையை ஈழத்தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் உரிமையோடு பங்குகொள்ளும் அவர்களுக்கே உரித்தான கடற்பகுதியாகும்.
ஒரு மக்கள் கூட்டத்தின் நிலம் என்கின்ற போது அந்த மக்கள் கூட்டம் வாழ்கின்ற நிலப்பரப்பும் அதனை ஒட்டியதான கடற்பரப்பும் அவர்களுக்கே உரித்தானது. அதுவே அவர்களுடைய தாயகம் என வரையறுக்கப்படுகின்றது.
ஆனால் கடந்த காலங்களில் தாயகம் என்கின்றபோது நிலத்தை மட்டும் கருத்தில் எடுக்கின்ற ஒரு தவறான கருத்தியல் ஈழத்தமிழர் மத்தியில் இருப்பது கவலைக்குரியது. உலகின் முதலாவது கடலாதிக்கப் பேரரசு சோழப் பேரரசாகும்.
10 ஆம் நூற்றாண்டிலிருந்து 13ஆம் நூற்றாண்டு வரையான ஏறக்குறைய 400 ஆண்டுகள் இந்து - பசுபிக் சமுத்திரப் பகுதிகளிலுள்ள வங்கக் கடலிலும்(தமிழன் கடல்), தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளிலும், அராபியக் கடலிலும் சோழர்களின் கடற்படையும், சோழர்களின் பட்டயம் அளிக்கப்பட்ட வர்த்தக கம்பனிகளான ஐநூற்ரொருவர் கணம், நானாட்டார் கணம் போன்றவை ஏகசெல்வாக்குச் செலுத்தின.
சோழர்கள் தான் முதன் முதலில் கடல் கடந்து படையெடுத்துச் சென்று தென்கிழக்காசியாவில் ஸ்ரீ விஜயா சாம்பிராஜ்சம் என்ற ஓர் அரசை ஸ்தாபித்தார்கள்.
கடல் வீரர்களை சுமந்துகொண்டு தொடராக இந்தோ – பசுபிக் கடலில் உலாவந்த கடற் கலங்களுக்கு "நாவாய்" என அன்று அழைத்தனர். இன்று ஆங்கிலத்தில் கடற்படைக்கு நேவி (NAVY) என்ற சொல் நாவாய் என்ற தமிழ் வேர்ச் சொல்லில் இருந்தே தோன்றியது.
சோழர்கள் வங்கக் கடலில் கிழக்கு நோக்கி தமது கடல் ஆதிக்கத்தை மலாக்கா தொடுகடல் வரை பரப்பி வளமான தென்கிழக்காசிய நாடுகளில் இருந்த சிற்றரசுகளை வீழ்த்தி தமது பேரரசை நிறுவினார்கள்.
அதே நேரம் அவர்கள் மேற்கே அரபிக்கடலிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள். பாரசிகர்களும், அராபியர்களும் மத சித்தாந்தத்தின் அடிப்படையில் தங்களிடம் வலுவான மூர்க்கமான தரைப் படையை வைத்து இருந்தார்கள். அவர்கள் தான் முதன்முதலில் மேற்கே கிரேக்கருடன் மோதி வெற்றி பெற்றவர்கள் என்ற வகையிலும் அவர்கள் படைத்துறை சார்ந்த நீண்ட வளர்ச்சியையும் வரலாற்றுப் போக்கையும் கொண்டவர்கள்.
ஆனால் அவர்கள் வர்த்தக நோக்கத்திற்காக மட்டுமே அன்றைய காலத்தில் கடல் ஓடினார்கள். அவர்களிடம் கடலில் யுத்தம் செய்யவும், கடல் கடந்து நிலங்களை கைப்பற்றுவதற்கான கடற்படை வலு அன்று அவர்களிடம் இருக்கவில்லை.
ஆயினும் சோழர்கள் பாரசீகத்திற்கோ, அரேபியாவிற்கோ படையெடுத்துச் செல்லவில்லை எனெனில் மேற்காசியாவில் பாலைநிலத்தில் கடல் வழியாக தரையிறக்கத்தை செய்து அவர்களுடன் போரிட்டு அந்த நிலத்தைக் கைப்பற்ற முடியும். ஆனால் அந்த நிலத்தை தொடர்ந்து தக்கவைக்க சோழர்களினால் முடியாது.
ஏனெனில் அராபியர்களும், பாரசீகர்களும் பாலை நிலத்தில் அவருக்கே உரித்தான போரியல் தந்திரோபாயங்களை பயன்படுத்தி தொடர் யுத்தத்தை மேற்கொள்வர். அதனால் பெரும் சேதங்களை சோழர்கள் அடைய வேண்டிவரும் என்பதை அறிந்தே அவர்கள் மேற்கு நோக்கி படையெடுக்கவில்லை.
சோழர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அராபியக் கடலிலிருந்து வங்கக் கடல் ஊடாக மலாக்கா தொடுகடல் வரை உள்ளடக்கியதாக வகுத்ததுக் கைக்கொண்ட ""தமிழன் கடல்"" என்ற கடற் கொள்கையாகும்.
இவ்வாறு அரசியல் அர்த்தத்தில் சோழர்கள் வரையறுத்த கடல்சார் கொள்கையைத்தான் இன்று அமெரிக்கா "இந்தோ-பசுபிக் கோட்பாடு" என தமது நலன் சார்ந்து மீண்டும் புதுவடிவம் கொடுத்திருக்கின்றது.
சோழருடைய கடல் சார் ஆதிக்ககொள்கைதான் இன்றை நவீன இந்தியாவுக்கும் பொருத்தமானது. இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்கு,மேற்கு கடற்கரை முழுவதும் சோழர் கட்டுப்பாட்டிலேயே அன்று இருந்தது.
1000 ஆண்டுக்கு மேற்பட்ட வரலாற்றை கொண்ட அனுராதபுரத்தை சோழர் அழித்துவிட்டு பொலநறுவையில் ஒரு புதிய நகரத்தை ஜனநாத மங்கலம் என்ற பெயரில் உருவாக்கினார்கள்.
இதற்கு அடிப்படைக் காரணம் என்னவெனில் திருகோணமலைத் துறைமுகத்தை சோழர்கள் தமது கடற்படைத் தளமாக பயன்படுத்தினர். கடற்படைத் தளத்திற்கும் தலைநகரத்துக்கான தொடர்பை இலகுபடுத்துவதற்காகவும்தான் அனுராதபுரத்தில் இருந்த தலைநகரம் பொலனறுவைக்கு மாற்றப்பட்டது.
அன்றிலிருந்துதான் ஈழத் தமிழர் தாயகத்தின் கடல்சார் முக்கியத்துவம் உலகிற்கு பறைசாற்றபட்டது என்பதே இங்கே அரசியல் அர்த்தத்தில் முக்கியத்துவமானது. சோழருடைய கடல் ஆதிக்ககொள்கைதான் இன்றை நவீன இந்தியாவுக்கு பொருத்தமானது.
சோழருடைய கடல் ஆதிக்ககொள்கையை உற்று அவதானித்தால் மேற்குறிப்பிட்ட இலங்கைத்தீவின் தமிழர் பிரதேசம் சோழர்களின் கடல் ஆதிக்க கடற்கொள்கையின் வியுகத்தில் இணைவது புரியும்.
சோழர்களின் கடல் ஆதிக்கம் வீழ்ச்சி அடைகின்றபோது 13ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் 14ஆம்,15ஆம் நூற்றாண்டு வரை அராபியர்களின் கைகளில் இந்து சமுத்திர ஆதிக்கம் சென்றது. அவர்கள் தமிழன் கடலான வங்கக் கடலைக் கடந்து தென்கிழக்காசிய வரை வர்த்தகம் செய்து ஆதிக்கம் செலுத்தியதோடு மாத்திரமல்ல தென்கிழக்காசியாவில் மலேசியா, இந்தோனேசியா என்ற இரண்டு பெரும் இஸ்லாமிய நாடுகளை கட்டமைப்புச் செய்துவிட்டார்கள்.
சோழர்களாகிய தென்னிந்தியர்களின் கடல் வலிமை குன்றியபோது இத்தகைய பெரும் மாற்றம் நிகழ்ந்து இருக்கின்றது என்பதனை நாம்கருத்தில் கொள்ளவேண்டும்.
சோழர்களின் கடற்படையும், கடற்கொள்கையும் தொடர்ந்து நடைமுறையில் இருந்திருந்தால் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் இஸ்லாமிய எழுச்சி ஏற்படுவதற்கான எந்த வாய்ப்பும் அன்று இருந்திருக்காது.
15ஆம் நுாற்றாண்டில் சீனர்கள் இந்தியப் பெருங் கடலில் பெரும் கடற்படையுடன் உள்நுழைய தொடங்கினர். இந்து சமுத்திரத்தில் இலங்கைத்தீவிற்கு கி.பி 1407-1419 களில் நான்குதடவைகள் சீன கடற்படைத் தளபதி அட்மிரல் ஷென் -ஹி (Admiral Zheng-he) 440 அடி நீளமும்180 அடி அகலமும் கொண்ட பாரிய 62 கப்பல்களில் 37,000 சீன வீரர்களுடன் வந்தான்.
இலங்கைத்தீவில் முதலாவது துப்பாக்கிப் பிரயோகத்தை செய்தவனும் ஷென் -ஹிதான். அவன் கொழும்பு கோட்டை இராச்சியத்தைகைப்பற்றி (1409-1411)மூன்று ஆண்டுகள் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்துவிட்டு சென்றவிட்டான்.
16ம் நுற்றாண்டில் போத்துக்கேயரும், ஒல்லாந்தரும்,தொடர்ந்து ஆங்கிலேயரும் இந்து சமுத்திரத்தினுள் நுழைந்து இப்பிராந்தியநாடுகளை தமது காலனியாக நாடுகளாக ஆக்கினார்கள்.
தற்போது 600 ஆண்டுகளின் பின் சீனா மீண்டும் தனதுஆளுகையை இலங்கைமீதும், இந்து சமுத்திரத்தின்மீதும் செலுத்த முற்படுகிறது இந்த அடிப்படையிற்தான் அண்மைக் காலமாக தமிழர் தாயகத்தின் வடக்குநோக்கி சீன பிரதிகளும், சீன தூதுவர்களும் வருகை தருகிறார்கள்.
தமிழ் மக்களுக்கு நிவாரண உதவி செய்கிறோம் என்றும் தமிழர்களுக்கான அடிக்கட்டுமான அபிவிருத்தி செய்கின்றோம் என்ற போர்வையிலும் ஈழத் தமிழர் பண்பாட்டை நாங்கள் மதிக்கிறோம் என்றும் பாசாங்கு அரசியலை செய்து தமிழர்களை தம் பக்கம் திருப்ப முயற்சிக்கின்றார்கள்.
தமிழர்களை தன் பக்கம் திருப்பிவிட்டால் பாக்கு நீரிணையில் வங்கக் கடலிலும் தம் ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியும் என சீனர்கள் நம்புகிறார்கள். அதற்கான அனைத்துவிதமான முன் நகர்வுகளையும் வேகமாக ஆரம்பித்துவிட்டார்கள்.
"ஏனைய நாடுகளுக்கு இந்து சமுத்திரமானது உலகில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த சமுத்திரங்களில் ஒன்றுமட்டுமே. ஆனால் இந்தியாவிற்கு இந்து சமுத்திரம்தான் அதன் உயிர்நாடியாகும்.
இந்தியாவின் உயிர் வாழ்வும், சுதந்திரமும் இந்நீர்ப் பரப்பின் பாதுகாப்பிலேயே தங்கியுள்ளது. இந்துசமுத்திர நீர்ப்பரப்பு பாதுகாக்கப்படாமல் இந்தியாவிற்கு தொழில்விருத்தியுமில்லை, வர்த்தக வளர்ச்சியுமில்லை, ஸ்திரமான அரசியல் அடித்தளமுமில்லை" எனஇந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் கே.எம்.பணிக்கர் அவர்கள் குறிப்பிட்டது எக்காலத்திற்கும் இந்தியா பொறுத்து பொருத்தமானதே.
இந்தியாவின் பாதுகாப்பு வலையத்துக்குள் இருக்கக்கூடிய இலங்கைத்தீவினுள்ளே இன்னுமொரு வல்லரசு வந்து நிலைகொள்வதை இந்தியாவினால் ஒரு போதும் சகித்துக்கொள்ள முடியாது.
இப்பின்னணியில் நின்றுகொண்டு இந்த சமுத்திரம்
தழுவிய ஈழத்தமிழர்களின் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை சரிவர உணர்ந்து,
அதனடிப்படையில் ஈழத்தமிழர்கள் தமக்கான அரசியல் வியூகங்களை வகுத்து , சிறப்பான
முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும்.