கிழக்கு கொள்கலன் முனையம் அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் சீனா வசம்!
கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையத்தின் (ECT) இரண்டாம் கட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனி லிமிடெட் (CHEC) தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் முழுமையாக இயக்கப்படும் முனையமான கிழக்கு கொள்கலன் முனையத்தை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்வதற்காக, இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் இரண்டாம் கட்டத்தின் சிவில் வேலைகளுக்காக சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளதடன், 03 விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த விலைமுறிகள் தொடர்பாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பெறுகைக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய குறித்த ஒப்பந்தம் அக்ஷன் இன்ஜினியரிங் கம்பனி மற்றும் சைனா ஹாபர் இன்ஜினியரிங் கம்பனி லிமிட்டட் கூட்டு வணிகத்திற்கு வழங்குவதற்காக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதேவேளை, முன்னதாக ஜப்பானுடன் மூலோபாய கிழக்கு கொள்கலன் முனையத்தை உருவாக்க இந்தியா முன்வந்தது. எனினும் தற்போதைய அரசாங்கம் அதற்கு பதிலாக மேற்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.