தாய்வானில் தொடரும் போர் பதற்றம்! சீனா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
தாய்வானை சுற்றிவளைப்பது போன்று மூன்று நாள் போர் ஒத்திகையை சீனா ஆரம்பித்துள்ளது.
தாய்வான் ஜனாதிபதி அமெரிக்க விஜயத்தை முடித்துக்கொண்டு திரும்பிய சில மணிநேரத்தில் சீனா இந்த ஒத்திகையை ஆரம்பித்துள்ளது.
அமெரிக்காவுடனான நட்பு
தாய்வானை சீனா சொந்தம் கொண்டாடும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், சுதந்திர தீவு நாடாக அறிவித்து கொண்டுள்ள தாய்வான், தொடர்ந்து அமெரிக்காவுடனான நட்புறவை வளர்த்துக் கொள்ள தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வகையில் அமெரிக்காவின் வலுவான ஆதரவு வேண்டி, தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென்(Tsai Ing-wen) கலிபோர்னியாவில் அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி-யை(Kevin McCarthy) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மூன்று நாள் போர் ஒத்திகை
சீனா தாய்வானிற்கு அருகில் அடிக்கடி ஒத்திகையில் ஈடுபடுகின்ற போதிலும் இம்முறை சுத்திவளைப்பு ஒத்திகை தாய்வான் ஜனாதிபதியின் சீன விஜயத்திற்கான பதிலடியாக காணப்படுகின்றது.
இந்த ஒத்திகையின் போது தாய்வானை சுற்றிரோந்து நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபடுவது போல ஒத்திகைகள் இடம்பெறும் என தெரிவித்துள்ள சீன ஊடகங்கள் அதனை சுற்றிவளைப்பது போலவும் ஒத்திகைகள் இடம்பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளன.
இது தொடர்பாக சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் கிழக்கு கட்டளை வெளியிட்டுள்ள தகவலில், ஒருங்கிணைந்த கூர்மை படை ஏப்ரல் 8 முதல் 10ம் திகதி வரை போர் ஒத்திகையை முன்னெடுக்கும் என தெரிவித்துள்ளது.
கடுமையான எச்சரிக்கை
மேலும், இந்த போர் பயிற்சி தாய்வான் பிரிவினைவாத படைகளுக்கு எதிரான "கடுமையான எச்சரிக்கை" என்றும் சீன ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, 13 சீன போர் விமானங்கள் மற்றும் 3 போர் கப்பல்களை தீவை சுற்றி கண்டதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சீனாவின் இந்த செயல் பிராந்திய நிலைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கிழக்கு புஜியன் மாகாணத்தின் கடற்கரையில் சீனா திங்கட்கிழமை காலை 7 மணி முதல் 8 மணி வரை நேரடியான துப்பாக்கி சூடு பயிற்சியை மேற்கொள்ளும் என மாகாண கடல்சார் ஆணையம் தெரிவித்துள்ளது.