இலங்கை தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!
இலங்கையுடனான உறவுகளில் எவ்வித முரண்பாடும் கிடையாது என்று சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.
சேதன உரம் தொடர்பிலான சர்ச்சை காரணமாக இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்படாது என இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பேச்சாளர் லுயொ சொங் (Luo Chong) தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து சேத உரத்தை இறக்குமதி செய்யாவிட்டால் பாதக விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த எச்சரிக்கை குறித்த வதந்தி முற்றிலும் பொய்யானது எனவும், இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான மூலோபாய கூட்டுறவு வரலாற்று ரீதியானது எனவும் அது வலுவானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு பரஸ்பர புரிந்துணர்வு பரஸ்பர மரியாதையின் அடிப்படையிலானது என்றும் குறிப்பிட்ட அவர், கோவிட் பெருந்தொற்று ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இலங்கையுடன் சீனா இணைந்து செயற்பட்டு வருவதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள சீன சேதன உர நிறுவனமானது பல நாடுகளுக்கு உரம் ஏற்றுமதி செய்வதாகவும் பல்வேறு சர்வதேச தரச் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திறந்த விலைமனுக் கோரல் அடிப்படையில் விவசாய அமைச்சு உர நிறுவனத்தை தெரிவு செய்துள்ளது எனவும், இரு தரப்புக்களும் பேச்சுவார்த்தை நடாத்தி இந்த முரண்பாட்டு நிலைமைக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானபூர்வமான ஆய்வுகளின் அடிப்படையில் இந்த சேதன உர இறக்குமதி குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.