செம்மணி விவகாரம் தொடர்பில் வன்மத்தை கக்கும் விமல்
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் எலும்புக்கூடுகளை அகழ்ந்து எடுப்பதால் என்ன பயன் கிடைக்கும் என்று தமிழர்கள் எண்ணுகின்றார்கள்? அதனால் எந்தப் பயனும் கிடைக்காது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
முதலில் அந்த மனித எலும்புக்கூடுகள் தமிழர்கள்தான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இன்னமும் பரிசோதனை நடத்தாமல் அந்த மனித எலும்புக்கூடுகளை வைத்துத் தமிழ்த் தரப்பினர் அரசியல் இலாபம் தேட முற்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தமிழர்கள் மாத்திரம் தான் உயிரிழந்தனரா...
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் ஏற்கனவே தெரிவித்தது போல் போர் நடந்த மண்ணில் மனித எலும்புக்கூடுகள்வெளிக்கிளம்பும் என்பது உண்மை. அதேவேளை, போர் நடந்த வடக்கு மண்ணில் தமிழர்கள் மாத்திரம் உயிரிழக்கவில்லை.
அங்கு இராணுவத்தினரும் இறந்தார்கள், சிங்கள, முஸ்லிம் மக்களும் இறந்தார்கள். போரில் இறந்த தமது உறவுகளின் எலும்புக்கூடுகளை வைத்து அரசியல் நடத்தும் தேவை சிங்கள - பௌத்தர்களுக்குக் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், யார் என்றே உறுதிப்படுத்தாத எலும்புக்கூடுகளை வைத்துத் தமிழர்கள் கேவலமான முறையில் அரசியல் நடத்துகின்றார்கள். இந்த நாட்டில் மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்த தமிழர்கள் விரும்புகின்றார்களா? என்று அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.