தமிழ் இனப்படுகொலை தொடர்பான கனேடிய பிரதமரின் கருத்துக்கு சந்திரிகா கொடுத்த பதிலடி
கனேடிய பிரதமர் இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடந்தது என்று கூறும் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். விசாரணைகள் எதுவுமின்றி இப்படியான சொல்லை கனேடிய பிரதமர் பயன்படுத்தியது கண்டனத்துக்குரியது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் இனப்படுகொலை
மே 18ஐ, தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக பிரகடனம் செய்யும் பிரேரணையை நாடாளுமன்றம் கடந்த ஆண்டில் ஒருமனதாக நிறைவேற்றியது.
இந்த மோதலில் பாதிக்கப்பட்டவர்களதும், தப்பிப் பிழைத்தோரதும் உரிமைகளுக்காகவும், இலங்கையில் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்கொள்வோருக்காகவும் குரல் கொடுப்பதைக் கனடா நிறுத்தமாட்டாது என்று அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையில் இறுதிப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டில் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் நீதியான விசாரணை எதுவும் இதுவரை நடைபெறவில்லை.
அதனால்தான் பாதிக்கப்பட்ட தரப்பினர் சர்வதேசத்திடம் நீதி வேண்டி நிற்கின்றார்கள்.
இலங்கையில் தமிழ் இனப்படுகொலை
இந்தநிலையில் தான் வெளிநாடுகளின் தலைவர்களும் சர்வதேசப் பிரதிநிதிகளும் இலங்கை அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதுடன் நாட்டை அவமானப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
ஒரு நீதியான உள்நாட்டு விசாரணை நடத்திருந்தால் வெளியில் இருப்போர் நாட்டையும், அரசையும் இவ்வாறு தூற்றி இருக்கமாட்டார்கள்.
எனினும் கனேடியப் பிரதமர் இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடந்தது என்று கூறும் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.
விசாரணைகள் எதுவுமின்றி இப்படியான சொல்லை கனேடியப் பிரதமர் பயன்படுத்தியது கண்டனத்துக்குரியது.”என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |