இராணுவத்தினருக்காக 1500 ஏக்கர் காடுகளை சுவீகரிக்க நடவடிக்கையை தடுத்து நிறுத்திய சாணக்கியன், ஜனா!
தாந்தாமலையில் இராணுவத்தினருக்காக 1500 ஏக்கர் காடுகளைச் சுவீகரிக்கும் நடவடிக்கையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருணாகரம் ஆகியோர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள தாந்தாமலை பிரதேசத்திலுள்ள 1500 ஏக்கர் காடுகளை இன்று(திங்கட்கிழமை) இராணுவத்தினரின் தேவைக்காகச் சட்டவிரோதமாகக் கையகப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதற்கு இன்று இடம்பெற்ற அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருணாகரம் ஆகியோர் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
அத்துடன், குறித்த நடவடிக்கையினை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் இருவரும் வலியுறுத்தியிருந்தனர்.
இதனை இணைத்தலைவர் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனும் ஏற்றுக்கொண்டிருந்ததுடன், பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் ஏகமானதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், மாவட்ட அபிவிருத்தி குழுவில் தீர்மானம் எடுப்பதற்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.


