ஐ.மக்கள் சக்தியின் சிலருடன் இணைந்து புதிய அரசியல் சக்தியை உருவாக்கும் சம்பிக்க ரணவக்க
ஐக்கிய மக்கள் சக்தியின் சிலரது ஆதவுடன் எதிர்காலத்தில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்க உள்ளதாக 43 வது படைப்பிரிவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பதுளையில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
புதிய அரசியல் சக்தியில் ஐ.மக்கள் சக்தியினரும் சம்பந்தப்படுவார்கள்
நாட்டுக்கு பொருத்தமான நடுநிலையான செயற்பாட்டு ரீதியாக வேலை செய்யக் கூடிய தொழில் மட்டத்திலான இளைய தலைமுறையின் நம்பிக்கை வென்றெடுக்கும் அரசியல் சக்தியை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த நாங்கள் உத்தேசித்துள்ளோம்.
நாட்டுடன் முன்நோக்கி செல்லும் இந்த நடவடிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த சிலரும் சம்பந்தப்படுவார்கள் என நாங்கள் நினைக்கின்றோம். கட்சிகள் மீது தற்போது மக்களுக்கு நம்பிக்கையில்லை. நாடாளுமன்றத்திற்குள் நாட்டை மாற்ற முடிந்த நடுநிலையான சக்தியே தற்போது நாட்டுக்கு தேவை.
எதிர்க்கட்சியில் தற்போது 108 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அதனை 113 ஆக மாற்ற வேண்டியது அவசியம். அதன் பின்னர் ராஜபக்சவினரின் கைதிகளாக இல்லாமல் முக்கியமான பயணத்தை எமக்கு மேற்கொள்ள முடியும்.
ராஜபக்சவினரை மக்கள் வீதியில் இறங்கி விரட்டியடித்தனர்
கட்சிகளின் தோற்றம் நாட்டின் நெருக்கடியின் வெளிப்பாடு. இதன் மூலம் அதிகளவான அனர்த்தம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ராஜபக்சவினருக்குமே ஏற்பட்டுள்ளது.
நாட்டின் இந்த நிலைமையை ராஜபக்சவினர் இன்னும் புரிந்துக்கொள்ளவில்லை. நாட்டு மக்கள் வீதியல் இறங்கி நேரடியான செயற்பாடுகள் மூலம் அடித்து விரட்டியுள்ளனர்.
மீண்டும் பொலிஸ் மற்றும் இராணுவ பலத்தை பயன்படுத்தி மேற்கொள்ளும் முயற்சியின் மூலம் மக்கள் மத்தியில் ராஜபக்சவினர் தொடர்பாக இருக்கும் வெறுப்பும், கோபமும் அதிகரிக்கும்.
திட்டங்கள் இல்லாத காரணத்தினாலேயே எரிபொருளை இறக்குமதி செய்ய பணம் இல்லாத பிரச்சினை ஏற்பட்டது. 2015 ஆம் ஆண்டு நாங்கள் ஒரு லீட்டர் டீசலை 95 ரூபாவுக்கும் பெட்ரோலை 117 ரூபாவுக்கும் வழங்கினோம்.
மகிந்த ராஜபக்ச தன்னிச்சையாக தமக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கிய ஒப்பந்த முறைக்கு பதிலாக போட்டியான ஒப்பந்த முறையை ஏற்படுத்தி 6 ஆயிரத்து 700 கோடி ரூபாவை மக்களுக்கு பகிர்ந்தளித்தோம்.
13 வீதமாக மின்சார கட்டணங்களை குறைத்து இலங்கை மின்சார சபைக்கு இரண்டாயிரம் கோடி ரூபா இலாபத்தை பெற்றுக்கொடுத்தோம். தற்போது எந்த திட்டங்களும் இல்லை என்பதே பிரச்சினை எனவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.