ஐ.மக்கள் சக்தியின் கூட்டத்தில் இருந்து வெளியேறிய சம்பிக்க ரணவக்க
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தனியாக உருவாக்கி வரும் அமைப்பு சம்பந்தமாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக, அவர் கூட்டத்ில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
சம்பிக்க ரணவக்கவின் தலையீட்டில் உருவாக்கப்படும் அமைப்பில் உள்ளவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் ஏன் இணைய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரஞ்சித் மத்துமபண்டார, ஹர்ச டி சில்வா ஆகியோர் சம்பிக்க ரணவக்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தேர்தல் நடைபெறும் தருணத்தில் அந்த அமைப்பினர் சஜித் பிரேமதாசவின் தலைமையை ஏற்காது வேறு ஒருவரை தலைவர் எனக் கூறினால் என்ன நடக்கும் என சரத் பொன்சேகா வினவியுள்ளார்.
அதேவேளை தனிமையான அமைப்புகளை உருவாக்கும் தேவை எவருக்கும் அவசியமாக இருக்காது எனவும் அனைவரும் இணையக் கூடிய சில மேடைகளை ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கியுள்ளதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார். கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கடும் விமர்சனங்கள் காரணமாக சம்பிக்க ரணவக்க அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.