உள்ளூராட்சி மன்றங்களுக்கு மத்திய அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டும்: பிரசன்னா
கோவிட் -19 நிலைமை காரணமாக உள்ளூராட்சி சபைகளின் வருமானம் போதாதுள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு மத்திய அரசாங்கம் எதிர்வருகின்ற வரவு செலவுத்திட்டத்தினுடாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு, நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளரும், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலொ) கட்சியின் உபதலைவருமான, பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பித்த 45வது சபை அமர்வு இன்று(11) நடைபெற்றுள்ளது.
இதன்போது. அவர் சபை அமர்வைப் பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்தார். இதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
கடந்த நல்லாட்சிக் காலத்தில் அதாவது 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதியுடன் மாகாண சபைகளின் ஆட்சிக் காலம் நிறைவு பெற்றன. பின்னர் மாகாண சபைத் தேர்தலை மீண்டும் நடாத்தவில்லை என நல்லாட்சி அரசாங்கத்தைக் குறை சொல்லிக் கொண்டிருந்தவர்கள், தற்போது ஆட்சிக்கு வந்த குறிப்பாக ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று 2 வருடங்கள் ஆகின்ற போதிலும், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுற்று ஒன்றரை வருடங்கள் ஆகின்ற போதிலும், மாகாணசபை தேர்தலை நடாத்தாமல் இழுத்தடிப்புச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்தியாவின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து செல்லும் போது மாகாணசபைத் தேர்தலை வெகு விரைவில் நடாத்துவோம் எனக் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றார்களே தவிர உள்ளூராட்சி சட்டத்தின் படி மாகாணசபை என்பது சட்ட விதிக்குட்பட்டதாகும்.
எனவே அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடாத்த வேண்டும். மாகாண சபையில் அங்கம் வகித்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மக்கள் சேவை செய்ய முடியாமல் மாகாண சபையை மத்திய அரசாங்கம் முடக்கிக் கொண்டிருக்கின்றது.
மேலும் மக்கள் தற்போது மிகவும் வறுமைக் கோட்டின்கீழ் கஷ்டத்தில் உள்ளார்கள். இந்நிலையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு மத்திய அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுகின்ற பட்சத்தில் அதனூடாக கிராமங்கள் தோறும் அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும்.
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து எங்களது கட்சியின் இன்னும் கலந்து ஆலோசிக்கப்படவில்லை. அதற்கு நாங்கள் யாரையும் முன்மொழியவும் இல்லை. அதுபோல் கிழக்கிலும், இன்னும் அத்தொடர்பில் கலந்தாலோசிக்கவில்லை.
அதற்குரிய
சூழல் வருகின்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள 3 கட்சிகளினதும் ஒருமித்த
கருத்தோடு, கடந்த காலங்களில் விட்ட தவறுகள் கட்சிக்குக் கட்டுப்படாமலும்
மக்களுக்குச் சேவை செய்யாமலும், இருப்பவர்களை விடுத்து கட்சித் தலைமைகள் கூடிச்
சிறந்த மக்கள் சேவகர்களை வடக்கு, கிழக்கில் தமிழ் தேசிக் கூட்டமைப்பு
முதலமைச்சர் வேட்பாளர்களாகக் களமிறக்கும் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri