சாவகச்சேரி நகர சபையில் சைக்கிள் கட்சியினரை வெளியேற்ற வழக்குக்தாக்கல்
சாவகச்சேரி நகர சபைக்கும், சாவகச்சேரி பிரதேச சபைக்கும் தெரிவு செய்யப்பட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்களின் தேர்வுகளை இரத்துச் செய்வது தொடர்பான வழக்கை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று(25) விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
அவர்கள் போட்டியிட்ட வட்டாரங்களில் அடுத்த நிலையில் இருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களைச் சபையின் உறுப்பினர்களாக அறிவிக்கக் கோரி தமிழரசுக் கட்சி உறுப்பினர்களினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கே இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
வேட்பாளர் பட்டியலில் இடம்பெறத் தகுதியற்றவர்கள்
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சூசைதாசன் முன்னிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுமார் ஒன்றரை மணி நேரம் வாதாடி முன்வைத்த சமர்ப்பணங்களை ஏற்றுக்கொண்டு எதிர்த் தரப்புக்கு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்க நீதிபதி கட்டளையிட்டுள்ளார்.
மேற்படி இரு உள்ளூராட்சி சபைகளிலும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு பெண் உறுப்பினர்கள் அந்தந்தச் சபைகளில் போட்டியிடுவதற்கான தகைமையற்றவர்கள், தகுதியீனம் உடையவர்கள் என உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது.
அந்தத் தீர்ப்பின்படி மேற்படி இரு பெண் உறுப்பினர்களும் அந்தந்தச் சபைகளின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறத் தகுதியற்றவர்கள் எனக் காணப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட இரு வேட்புமனுக்களிலும் இருக்க வேண்டிய பெண் உறுப்பினர்களின் விகிதாசாரம் குறைந்து அந்தப் பட்டியல்களே தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை இழந்து விட்டன எனத் தற்போது மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அது தொடர்பான விளக்கங்களை செவிமடுத்த நீதிபதி அதன் அடிப்படையில் எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டு வழக்கை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
நீதிமன்றத்தில் பரிசீலனை
சாவகச்சேரி பிரதேச சபைக்குப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியின் 23 வேட்பாளர்களும் சாவகச்சேரி நகர சபைக்குப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியின் 16 வேட்பாளர்களும் இந்த மனுக்களில் மனுதாரர்கள் ஆவர்.
இரண்டு சபைகளிலும் போட்டியிட்ட மற்றைய கட்சிகள் அனைத்தினதும் வேட்பாளர்கள் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அதன்படி சாவகச்சேரி பிரதேச சபை தொடர்பான வழக்கில் 225 பேரும், சாவகச்சேரி நகர சபை தொடர்பான வழக்கில் 151 பேரும் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டங்களின்படி இத்தகைய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால், அந்த வழக்கு முதல் தடவை நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தினத்தில் இருந்து ஆறு மாதங்களுக்குள் வழக்கு விசாரித்து முடிவுறுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால் இந்த இரு வழக்குகளும் காலம் இழுபடாமல் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம். மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன், பெனிஸலஸ் துஷான் ஆகியோரும் மன்றில் முன்னிலையாகினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



