சுரேஷ் சலே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி மனு
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலேவை பயங்கரவாதத் தடைச் சட்டம் கீழ் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை சவாலுக்கு உட்படுத்தி உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை ஓய்வு பெற்ற வான்படை அதிகாரி ஒருவர் தாக்கல் செய்துள்ளார்.
90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை
இதில் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோரும் குற்றப்புலனாய்வு திணைக்களமும் மனுவின்பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மனுதாரர் தெரிவிப்பதாவது, பயங்கரவாதத் தடுப்பு சட்டம் நாட்டின் ஒற்றுமை மற்றும் பௌதீக ஒருமைப்பாட்டை பாதிக்கும் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அல்லது அரசியலமைப்பின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சட்டவிரோதமாக கவிழ்க்க நேரடியாக அல்லது மறைமுகமாக ஆதரவு வழங்கியவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலே மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகளால் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டார்.
பின்னர், அவரை பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்திடம் கோரிக்கை
இதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து அவரது குடும்ப உறுப்பினர்கள் கடும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உணவில் விஷம் கலந்து அவரைக் கொலை செய்ய முயற்சி இடம்பெறலாம் எனக் குடும்பத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, வீட்டிலிருந்து சமைத்த உணவை அவருக்கு வழங்க அனுமதிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரைக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள வளாகத்துக்கு வெளியே அழைத்துச் சென்று, அவரது உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்று அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர்.
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan