நல்லாட்சி அரசாங்கத்தால் சிறைபிடிக்கப்பட்ட தலைவர்! - பூ.பிரசாந்தன்
நாடாளுமன்ற உறுப்பினர் என்னும் சிறப்புரிமை போர்வைக்குள் புகுந்து கொண்டு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என்ற அடிப்படையில் மக்களுக்கு பொய்யான கருத்துகளை விதைக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் (P.Prasanthan) தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கிழக்கில் போலி பிரசாரங்களுக்குள் மூழ்கிவைக்கப்பட்டிருந்த மக்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்ததை பொறுக்க முடியாமல் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் தமது தலைவர் சிறைப்பிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆண்டு மாகாண சபை தேர்தல் நிச்சயமாக நடைபெறும் என அரசாங்கம் தமது கட்சியிடம் உறுதியளித்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
அண்மைக் காலமாக தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) மீதும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மீதம் இலக்கு வைத்து பராயமடையாத அரசியல் தலைமைகள் பல வீணான கருத்துக்களை குறிப்பிடுவதை நாங்கள் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
இவ்வாறான போலித்தனமான அரசியல் நோக்கத்திற்காக பேசப்படுகின்ற விடயங்களுக்கு நாங்கள் கருத்துச் சொல்வதில்லை. இருந்தாலும் பொறுப்பு மிக்க அரசியற்கட்சி என்ற வகையில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு இருக்கின்றது.
அண்மையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கிய ராஜபுத்திரன் (Chanakya Rajput) நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பாக எமது கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் (Sivanesathurai Chandrakanthan) மணல் அனுமதிப் பத்திரம் இருப்பதாக ஒரு இலக்கத்தினையும் குறிப்பிட்டிருந்தார்.
குறித்த இலக்கத்தையுடைய அந்த அனுமதிப்பத்திரமானது சுந்தரமூர்த்தி சந்திரகாந்தன் (Sundaramoorthy Chandrakanthan) என்ற பெயரில் உள்ளது. அந்த நபர் புதூர் கதிரவெளியைச் சேர்ந்தவர். வெருகல் ஆற்றில் மணல் அகழ்வதற்கான அனுமதியை பெற்றிருக்கின்றார். அவருடைய சாரதி அனுமதிப்பத்திரங்கள் உட்பட ஆவணங்கள் இருக்கின்றன.
சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் சுந்தரமூர்த்தி சந்திரகாந்தனுக்கும் இதில் எவ்வாறான தொடர்பு இருக்கின்றது என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
மக்கள் வாக்களித்து அனுப்பியது மக்களுக்காக சேவை செய்வதற்காகவாகும். ஆனால் நாடாளுமன்றம் சென்று தேவையற்ற பொய்யான வதந்திகளை பரப்புவது குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமையை பயன்படுத்திக்கொண்டு எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்க முடியாது என்ற அடிப்படையில் பொய்யான கருத்துக்களை மக்களுக்கு விதைத்துக்கொண்டிருக்கின்ற இவ்வாறான அரசியற் தலைமைகள் முதலில் ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் இளைஞர்களின் கைகளில் ஆயுதங்கள் திணிக்கப்பட்டபோது மண்ணை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் கழுத்தில் சயனைட்டையும் கையில் ஆயுதத்தையும் பிடித்துக்கொண்டு எல்லையை காவல் காத்தவர்.
பின்பு யுத்தத்தால் எதனையும் வெல்ல முடியாது, கருத்தை கருத்தால் வெல்லவேண்டுமே தவிர கருவியால் வெல்ல முடியாது என்ற அடிப்படையில் ஜனநாயக பாதைக்குத் திரும்பி கிழக்கு மாகாண மக்களுக்கு ஜனநாயக வழியை போதிக்க வேண்டும், ஜனநாயக அடிப்படையில் கிழக்கை கிழக்குத் தமிழர்கள் ஆளவேண்டும் என்ற அடிப்படையில் ஜனநாயக பாதைக்குத் திரும்பியவர்.
பாட்டனின் சொத்தை காப்பாற்றவோ அல்லது தந்தையின் சொத்தை காப்பாற்றவோ அரசியல் பாரம்பரியங்களை பிடித்துக்கொண்டு அரசியலுக்கு வந்தவரல்ல.
மக்களை நேசித்த ஒரு தலைவர் போராட்டப் பாதையிலிருந்து ஜனநாயக வழிக்கு தன்னை மாற்றிக்கொண்டு எவ்வாறு மக்களை கரைசேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசியலுக்கு வந்தவர்.
யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல், அரசியல் என்பது இரத்தம் சிந்தாத யுத்தம். ஜனநாயக ரீதியாக கிழக்கு மக்களின் அபிலாஷைகளை கிழக்கு மக்களின் எதிர்பார்ப்புகளை அரசியல் ரீதியாக கிழக்கு மக்களை மாற்று சமூகத்திடமும் மாற்று அரசியற்தலைமைகளிடமும் கையேந்த வைக்கக்கூடாது என்ற நோக்கத்தோடு கிழக்கு மக்களின் தலைமைத்துவம் வலுவாக வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்த ஒரு அரசியற் தலைமையினை தொடர்ந்தும் விமர்சிப்பதென்பது நாடாளுமன்ற சிறப்புரிமைக்குள் புகுந்து கொண்டு விமர்சிப்பதென்பது யாராலும் ஏற்றுக்கொளள்ள முடியாததொன்றாகும்.
மிகவும் போலித்தனமான இந்த விமர்சனங்களுக்கு நாங்கள் தொடர்ந்தும் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. நாங்கள் மக்களுக்கு சேவையாற்ற வந்தவர்கள். மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளையும் மக்களுக்கான ஒவ்வொரு விடயங்களையும் செய்துகாட்டுவதற்காக அரசியலுக்கு வந்தவர்கள். அதை நாங்கள் செய்து காட்டிக்கொண்டிருக்கின்றோம்.
கடந்த மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்றும் முதலமைச்சராக இருந்தும் மாகாணத்தில் அபிவிருத்திப் பணிகளை செய்துகாட்டினோம். அந்த அடிப்படையில் இவாவாறான போலியான, விசமப் பிரச்சாரங்களை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மாகாணத்தில் மிகப்பெரும் எழுச்சியை ஏற்படுத்தி வருகின்றார். மக்கள் மத்தியில் அரசியற் கருத்துக்களை விதைத்து அரசியல் மாயைக்குள்ளும் போலிப் பிரசாரத்திற்குள் மூழ்கியிருந்த மக்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருகின்றார் என்பதைப் பொறுக்க முடியாமல் நல்லாட்சி அரசாங்கமானது அரசியல் பழிவாங்கலை செய்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் சிறைப்பிடித்து வைத்திருந்தார்கள்.
இன்று அவர் சிறைப்பிடிக்கப்பட்ட தினமாகும். தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீது சேறு பூசுகின்ற அரசியற் தலைமைகள் வெட்கப்பட வேண்டும். வெளியிலிருந்தும் உங்களால் அதிகளவான வாக்குகளைப் பெற முடியவில்லை. ஆனால் சிறையிலிருந்து அவரது வாக்கைக்கூட வழங்காமல் மக்கள் அவர்மீது வைத்த நம்பிக்கையின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட வரலாற்றில் மக்கள் அதிகளவான வாக்குகளை வழங்கி முதன்மை நாடாளுமன்ற உறுப்பினராக அவரை தெரிவு செய்திருக்கின்றார்கள். இது அவரது அர்ப்பணிப்பான சேவை காரணமாகவேயாகும்.
எதைப்பேசவேண்டும் என்று தெரியாமல் நாடாளுமன்றத்தில் யாரையாவது விமர்சிப்பது, பத்திரிகையாளர் மாநாட்டை கூட்டி ஆக்க பூர்வமான எந்தக் கருத்துக்களையும் கூறாமல் யாரையாவது விமர்சிப்பது போன்றவற்றை மக்கள் நன்கு விளங்கி வைத்துள்ளனர்.
தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் யாரையும் விமர்சித்து யாருக்கும் எதிராக கருத்துச் சொல்லி தங்கள் வெற்றிப் பயணத்தை தொடரவேண்டும் என்றில்லை. மக்களுக்குச் சேவை செய்து மக்களை விழிப்படையச் செய்து அரசியலில் வலுவான சமூகமாக கிழக்கு மாகாண மக்களை மாற்ற வேண்டுமென்று வந்திருக்கின்றோம். எங்கள் பயணம் மக்களுடன் தொடர்ந்தும் செல்லும்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உயர்மட்டக் குழு தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மூன்று தினங்களுக்கு முன்பு கூடியது. அதன்போது தெளிவானதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
கிழக்கு மாகாணத்தில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுகின்றபோது அனைவரும் ஒரே கூரையின் கீழ் போட்டியிட்டு மாகாணத்தை வலுவாக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் கிழக்கு மண்ணை நேசிக்கின்ற கிழக்கு மக்களின் வலுவாக்கத்திற்காக தங்களை அர்ப்பணித்திருக்கின்ற அனைத்து தனித்தலைமைகளையும் அரசியற் தலைமைகளையும் சமூகநலன் விரும்பிகளையும் நாங்கள் அழைப்பதாக தீர்மானித்திருக்கின்றோம்.
கிழக்கு மாகாணசபையினூடாக எமது மக்களின் அபிலாஷைகளை தீர்த்துவைப்பதற்காக ஒன்றாகப் பயணிப்போம் என்று இன்று அவர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பல உறுப்பினர்கள் இன்று மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அழுது கொண்டிருக்கின்றார்கள். 2008ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்ட போது இது போலி மாகாண சபை என்றும் இதனை பொறுப்பெடுக்க மாட்டோம் என்றும் கூறியவர்கள் இன்று மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் என்று கூறுகின்றார்கள். தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனு கொடுக்கப்படுகின்ற அங்கீகாரமாகும்.
மாகாண ஆட்சி முறை எங்களுக்குப் பொருத்தமில்லை என்று கூறியவர்கள் கிழக்கு மாகாணத்தை தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பொறுப்பேற்று மாகாணத்தை நெறிப்படுத்தி அரசியல் ரீதியாக மக்களை வழிப்படுத்தியிருக்கின்ற சூழலில் அவர் காட்டிய வழியில் பயணிப்பதற்காக விரும்பியோ விரும்பாமலோ தமிழ் தேசியக் கூட்டமைப்பும் 60 வருடங்களாக அரசியல் செய்தவர்களும் அந்தப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்றால் அது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கொள்கையினை அதன் அடிக்கட்டுமாணத்தை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என்பது மறைமுகமாகத் தெரிகின்றது.
மாகாண சபைத் தேர்தல் இழுபடுவதற்கு முதற்காரணமாக இருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனோடு இணைந்த நல்லாட்சி அரசாங்கமும் என்பதை யாரும் மறுக்க முடியாது. 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டது. அந்த மாகாணசபையை எவ்வாறாவது ஒருவருடம் நீடித்துவிடலாம் என்று கிழக்கு மாகாணத் தலைமைகளும் தமிழ்த்தேசியத் தலைமைகளும் பாடுபட்டது. அது முடியாமல் போனது.
மாகாணசபைத் தேர்தல் முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று அதற்கு கரங்களை உயர்த்தி, மாகாண ஆட்சிமுறை இல்லாமல் நிர்வாக ரீதியாக மாகாண சபையை நடத்துகின்ற பொறுப்பினை தள்ளி மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நல்லாட்சி அரசாங்கமும் பொறுப்புக் கூற வேண்டும்.
தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் இணக்க ஆட்சி நடத்துகின்ற இந்த அரசு எப்படியாவது மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற உறுதியில் இருக்கின்றது. மிகவிரைவில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்ற நம்பிக்கையில் நாங்கள் தொடர்ந்தும் அதற்கான அழுத்தங்களை கொடுத்துக்கொண்டிருப்போம்.
தேர்தலானது எந்த முறையில் நடத்தப்படுவதாக இருந்தாலும் நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்று அதற்கான அனுமதி பெறப்பட வேண்டிய சூழல் இருக்கின்றது.
மிகவிரைவில் அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவிருக்கின்றன. நிச்சயமாக அடுத்த வருடம் மூன்றாம் மாதமளவில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று அரசு உறுதியளித்திருக்கின்றது.
தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் நடந்த சந்திப்பில் அதனை வலியுறுத்தியிருந்தார். மிகவிரைவில் கிழக்கு மாகாணத்தில் மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி செய்யக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவோம். 2008ஆம் வருடம் தமிழர்களின் கைகளிலிருந்த முதலமைச்சர் பதவியை யார் மாற்றிக் கொடுத்தார்கள், இன்று முதலமைச்சர் பதவியினையும் தமிழ் மக்களை பிழையாக வழிநடத்துவதற்காக போலியான பிரசாரங்களை செய்துகொண்டிருக்கின்றார்கள்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்பாடுகளை முடக்குவதற்காக பொய்யான பிரசாரங்களை நாடாளுமன்றத்திலும் ஏனைய இடங்களிலும் பேசிக்கொண்டிருப்பதை மக்கள் நன்கு உணர்ந்திருக்கின்றார்கள். மக்கள் தீர்ப்பு கூறுவார்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறைக்குள் இருந்தபடி எவ்வாறு தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கூடிய வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றாரோ மாகாண சபைத் தேர்தலிலும் எவ்வாறான பிரசாரங்களை செய்தாலும் மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். நல்லதொரு சூழல் கிழக்கு மக்களுக்கு உருவாகும்.