தேசபந்து தென்னக்கோனின் நியமனத்தை இரத்து செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்
தேசபந்து தென்னக்கோனுக்கு வழங்கப்பட்டுள்ள பதில் பொலிஸ் மா அதிபர் நியமனத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகள் சங்கத்தினால் இன்று (21.12.2023) இந்த கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
சித்திரவதை மற்றும் சட்டவிரோத கைது போன்றவற்றிலிருந்து விடுபடும் மனுதாரரின் அதிகாரங்களை, தேசபந்து தென்னக்கோன் உட்பட மூன்று அதிகாரிகள் கடுமையாக மீறியுள்ளனர்.
அதிகாரிகளின் மோசமான நடவடிக்கைகள்
இந்த அதிகார மீறல்களானது ஜனநாயகத்தின் அடிப்படையான சட்டதிட்டங்களை அவமதிக்கும் செயற்பாடாக நீதிமன்றத்தால் கருதப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர்கள் மீது மிளகாய் பொடியை தூவி மூச்சுத்திணறலை ஏற்படுத்தல், ஆடைகளை களைத்து தண்டனைக்கு உட்படுத்துதல் மற்றும் மனைவி மற்றும் குழந்தைகளின் முன்னால் கைது செய்யப்பட்டவர்களை தாக்குதல் போன்ற செயற்பாடுகள் தேசபந்து தென்னக்கோனின் கீழுள்ள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னக்கோன் உட்பட குறித்த அதிகாரிகள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டு அவர்களின் மீது விசாரணை நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும்.
ஜனாதிபதியிடம் கோரிக்கை
மேலும் தேசபந்து தென்னக்கோனுக்கு வழங்கப்பட்டுள்ள பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம் உடனடியாக இரத்து செய்யபட வேண்டும்.
தேசபந்து தென்னக்கோன் பதில் பொலிஸ் மா அதிபராக நாட்டின் ஜனாதிபதியான உங்களாலேயே நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை நாம் நினைவு கூற விரும்புகின்றோம்.
நீங்கள் இதற்கான நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என நாம் நம்புவதோடு இந்த கடிதத்தை நாம் சக குடிமக்களுடன் பகிர்ந்து கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |