கட்டுநாயக்க விமான நிலையத்தில் கனடா நாட்டுப் பிரஜை கைது
வெளிநாட்டுப் பயணி ஒருவர், இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 21 கோடி 77 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான குஷ் ரக போதைப்பொருள் தொகையுடன் வந்த பயணியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 42 வயதுடைய கனடா நாட்டுப் பிரஜை தெரியவந்துள்ளது. அவர் அந்நாட்டில் ஒரு கட்டிட ஒப்பந்ததாரராக பணியாற்றுபவர் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பயணப் பொதி
இந்த போதைப்பொருள் கடத்தலுக்காக அவர் மிகவும் நுணுக்கமான பாதையை பயன்படுத்தியுள்ளார்.

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் போதைப்பொருளைக் கொள்வனவு செய்த அவர், அங்கிருந்து சீனாவின் ஹொங்கொங் நகருக்குச் சென்று, பின்னர் அங்கிருந்தே கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளையும் அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 பொதிகள் கண்டெடுக்கப்பட்டன.
இவற்றில் மொத்தம் 21 கிலோகிராம் 779 கிராம் எடையுடைய குஷ் போதைப்பொருள் காணப்பட்டது. இப்பொதிகளில் போதைப்பொருள் மட்டுமே நிரப்பப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.