கனேடியப் பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
36 கோடி ரூபா பெறுமதியான ஹஷீஸ்" போதைப் பொருளுடன் கனேடிய பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கனடாவின் டொரொண்டோ நகரத்திலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரம் வழியாக நேற்றிரவு நாட்டுக்கு வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உளவுத்தகவல்
இலங்கை சுங்க மருந்துப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் குறித்த பெண், கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் பெற்றிருந்த சர்வதேச உளவுத்தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண், 36 வயதுடைய கனடிய பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பெண் கடுமையாக போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கனடிய பெண் பயணப்பையில் மறைத்து வைத்து, 36 கிலோ 500 கிராம் "ஹஷீஸ்" போதைப்பொருள் கடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த "ஹஷீஸ்" போதைப்பொருள் தொகை வேறு நாட்டிற்கு மறுபரிவர்த்தனை செய்யும் நோக்குடன் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
