பொலிஸை ஒழுங்குபடுத்த முழு நாடும் தலையிட வேண்டும் என அழைப்பு
கல்வியை இராணுவமயமாக்குவதற்கு எதிராகவும், அதிபர் - ஆசிரியர் ஊதிய சமத்துவமின்மையை வலியுறுத்தியும் போராடும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக அரசாங்கம் அடக்குமுறையை கையாள்வதாகக் குற்றம் சாட்டியுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பொலிஸாரை ஒழுங்குபடுத்த முழு நாடும் தலையிட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.
ஜனநாயக சமூகத்தில் பொது பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பைக் கொண்டுள்ள பொலிஸார், அரசாங்கத்தின் அடக்குமுறை இயந்திரமாகப் பயன்படுத்தப்படுவதாக, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் கீழ் 'ஆளும் குழுவின் தனியார் கூலிப்படையாக' செயற்படும் இலங்கை பொலிஸை ஒழுங்குபடுத்துவதில் ஒட்டுமொத்த இலங்கை மக்களும் தலையிட வேண்டும் என கூட்டமைப்பின் செயலாளர் பேராசிரியர் ரொஹான் லக்சிரி பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்மையில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்துடன், கொத்தலாவல சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
பேரணியின் நிறைவில், சவப்பெட்டி மாதிரி ஒன்று எரியூட்டப்பட்டதோடு, பல வீதித் தடைகள் தகர்க்கப்பட்டதாகவும், இந்த விடயத்தைப் பயங்கரவாதத்தின் கொடூரமான செயலாக வரையறை செய்த இலங்கை பொலிஸார், தமது சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய 15 ஆர்வலர்களை வேட்டையாடுவதாகப் பேராசிரியர் ரொஹான் லக்சிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
”தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவதாகவும், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டி, பொலிஸார் மிகவும் விரும்பத்தகாத - கூலிப்படை பாத்திரத்தில் செயற்படுகின்றனர். இந்த அடித்தளத்தை ஒரு தீவிர முரண்பாடாக மாற்றுவதற்கு அரசாங்கம் பல தீர்மானங்களை எடுத்துள்ளது.” அரசாங்க அரசியல்வாதிகளின் விழாக்கள் மற்றும் பொதுக் கூட்டங்களில் மக்கள் ஒன்று கூடுகையில், பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள மக்கள் பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் பிற பொதுத் துறைகளில் ஒருவருக்கொருவர் நெருக்கமாகப் பயணம் செய்யும் நேரத்தில் பொலிஸார் கண்களை மூடிக்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது நலனுக்காக மிகவும் கடினமான சூழ்நிலையில் நடத்தப்படும் போராட்டங்களில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டங்களை வலுவாக அமுல்படுத்துவதை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.
”மத்திய வங்கி கொள்ளை உள்ளிட்ட அரச சொத்தை மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட எவரும் தண்டிக்கப்படாத சூழ்நிலையில், சில வீதித் தடைகள் கீழே விழுந்ததைக் காரணம் காட்டி பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியதற்காகக் குற்றஞ்சாட்டி ஆர்வலர்களைச் சிறையில் அடைக்கும் முயற்சிகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.” என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போதைய அரசின் தனிப்பட்ட தேவைகளுக்காக இலங்கை பொலிஸ் செயற்படுவதாக அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. பொது பாதுகாப்பை முழுமையாக ஏற்றுக்கொண்ட நாகரீக நெறிமுறை நிறுவனமாக பொலிஸை மாற்றுவதற்கு, ஒன்றிணையுமாறு இலங்கை மக்கள், சட்ட சமூகங்கள், சிவில் மற்றும் வெகுஜன அமைப்புகளின் வலையமைப்பு, மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
கொத்தலாவல சட்டத்தை மீளப் பெறுவதோடு, ஆசிரியர்-அதிபர் நெருக்கடியை தீர்ப்பதற்குப் பதிலாக அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்ட நியாயமான போராட்டங்களை அடக்குவது, அரசாங்கத்தின் அரசியல் ஸ்திரத்தன்மையை மோசமாகப் பாதிக்கும் எனக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
