ஒன்லைன் முறையில் அபராதம் செலுத்தும் திட்டம் குறித்து வெளியான அறிவிப்பு!
நாடு முழுவதும் ஒன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொட்டாவை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் உரையாற்றும் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அனுமதி
இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,"இப்போது அபராதம் செலுத்துவது எளிதாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு இன்று அமைச்சரவை அனுமதி அளித்தது.
ஆசன பட்டி அணிந்து அபராதம் செலுத்தாமல் கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். கவனமாக சென்று வாருங்கள் என்பதே எமது கருப்பொருள்.
இலங்கையில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இப்போது தொலைபேசிகளை வழங்கி வருகிறோம்.
இந்த ஆண்டு முதல், எங்கிருந்தும் அபராதம் செலுத்தலாம். தற்போது, குருநாகல் முதல் அனுராதபுரம் வரை மட்டுமே தொலைபேசி மூலம் அபராதம் செலுத்த முடியும்."என கூறியுள்ளார்.