பேருந்து கட்டணம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை
புத்தாண்டு காலத்தில் பேருந்து கட்டண திருத்தத்தை 100 சதவீதம் பேருந்துகளில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று(06.04.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டண திருத்தங்கள்
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,அண்மைய பேருந்து கட்டண திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படாத பல சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
எரிபொருள் விலை குறைக்கப்பட்டவுடன் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பேருந்து கட்டணத்தை மாற்றியமைத்துள்ளது.
இதற்கமைய அனைத்து பேருந்து உரிமையாளர்களும் புதிய பேருந்து கட்டண திருத்த பட்டியலை பயணிகளுக்கு தெளிவாகக் காண்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
ஆனால்,பல வழித்தடங்களில் திருத்தப்பட்ட பேருந்து கட்டணம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
கடும் நடவடிக்கை
திருத்தப்பட்ட பேருந்து கட்டணத்தை நடைமுறைப்படுத்தாத பேருந்துகளுக்கு நடமாடும் ஆய்வாளர்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நியமித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை புதிய கட்டணத்தை நடைமுறைப்படுத்தாத பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இருப்பினும், ஒரே சம்பவம் குறித்து பலமுறை புகார் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பில் மேல் மாகாணத்தில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.”என தெரிவித்துள்ளார்.
