காலத்தை வென்ற மக்கள் நேய வரவு - செலவுத் திட்டம் கடற்றொழில் துறைக்கென பலமான தைரியத்தை தந்துள்ளது
காலத்தை வென்ற மக்கள் நேய வரவு - செலவுத் திட்டமானது, அனைத்துத் துறைகளையும் சேர்த்தே கடற்றொழில் துறைக்கெனவும் ஒரு பலமான தைரியத்தை தந்துள்ளது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டதின் கடற்றொழில் அமைச்சு தொடர்பாக இன்று (07) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்ரெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் மொத்தம் 321,575 மெற்றிக் தொன் மீனின அறுவடையினை நாம் எட்டியுள்ளோம்.
இதே காலப்பகுதியில் அலங்கார மீன்கள் ஏற்றுமதியின் மூலம் 2,754.1 மில்லியன் ரூபா அந்நியச் செலாவணியை பெற்றுள்ளோம்.
தடை செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்ட, சட்டவிரோத கடற்றொழில் மற்றும் நன்னீர் வேளாண்மை செயற்பாடுககளை முழுமையாகத் தடை செய்வதற்கான ஒழுங்கு விதிகளை நாம் கொண்டு வருவதுடன், அதனை வினைத்திறன் மிக்கதாக செயற்படுத்தவதற்கு கடல் ரோந்து நடவடிக்கைகளை கரையோரப் பாதுகாப்புப் படையினருடன் இணைந்த ஒரு கூட்டு ஏற்பாடாக மேற்கொள்வது, கடல் வளத்தைப் பேண பாதுகாப்பு காவலர்கள் மற்றும் உயரதிகாரிகளை நியமிப்பது போன்றவற்றை ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளோம்.
கண்டல் தாவரங்களின் அழிவினைக் கட்டுப்படுத்துவதற்கும், அவற்றை நடுகை மற்றும் மீள் நடுகைச் செய்வதற்கும், அதில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளை பணிகளில் அமர்த்துவதற்கும் உத்தேசித்துள்ளோம்.
கடந்த கால உதாசீனப் போக்குகள் காரணமாக மூடப்பட்டுள்ள குளிரூட்டி தொழிற்சாலைகள், அதி விறைவிப்பான் தொழிற்சாலைகள் போன்றவற்றை மீளத் திறப்பதற்கும், தேவைக்கேற்ப புதிய தொழிற்சாலைகளை நிறுவுதற்கும் ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.
சூரிய மின்சக்தியின் மூலம் இயங்கத்ததக்க இயந்திரங்களின் மூலம் உலர்த்தும் வகையில் புதிய மீன்களைக் கொண்ட கருவாடு மற்றும் மாசி உற்பத்தியினை ஏற்றுமதித் தரத்திற்கேற்ப மேற்கொள்வதற்கும், இதற்கென தேர்ந்தெடுக்கப்படுகின்ற பகுதிகளில் கருவாடு மற்றும் மாசி உற்பத்தி கிராமங்களை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
ஆழ்கடல் கடற்றொழில் தொடர்பில் பங்களிப்புகள் காட்டப்படாதுள்ள பகுதிகளிலும், பங்களிப்புகள் குறைந்து காணப்படுகின்ற பகுதிகளிலும் அதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு அத் தொழிற்துறையை ஊக்குவிப்பதற்கும், கை மூலமான நீள் வரித் தூண்டில் கடற்றொழில் முறைமையை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
இதன் மூலம் அறுவடைக்குப் பின்னரான பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்.
கடற்றொழில் கிராமங்களில் வீடமைப்புத் திட்டங்கள் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள், தொழில் சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றையும் இனங்கண்டு, படிப்படியாக அவற்றை மேற்கொள்வதற்கும், கடற்றொழில் சமூகத்தினருக்கு ஏனைய சமூகத்தினர் அனுபவித்து வருகின்ற அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வதற்கும், அவர்களது பிள்ளைகளின் ஈடுபாடுகளை அவதானத்தில் கொண்டு அதற்கேற்ற வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதற்கும், அவர்களது கல்வித் தரத்தினை உயர்த்துவதற்கும் நாம் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம்.
அதேநேரம், தொழில் பாதிப்பு காலங்களில் கடற்றொழிலாளர்களுக்கென நியாயமான ஒரு தொகை கொடுப்பனவை வழங்கக்கூடிய காப்புறுதித் திட்டமொன்றை ஏற்படுத்துவதற்கும், ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.
அத்துடன், விரால் மீனினத்தைச் சார்ந்த பாம்புத் தலை மீன் எனப்படும் சன்னா மீன்வகை இனப்பெருக்க நிலையங்களை பொலன்னறுவை, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் அமைப்பதற்கும், நாரா நிறுவனம் மற்றும் கடல் சார் பல்கலைக்கழகங்களின் உதவியுடன் கடற்றொழில் சார் அலுவலர்களின் தொடர் பணி வளர்ச்சி கருதி கடற்றொழில் மேலாண்மை கற்கையில் முதுகலை டிப்ளோமா பட்டம் வழங்க அமைச்சின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
அதேநேரம், எமது நாட்டில் பரவலாகக் காணப்படுகின்ற குளங்கள், சிறு குளங்கள், நீர்த் தேக்கங்கள், பருவகால நீர்த் தேக்கங்கள், அனைத்தையும் பயன்படுத்தியும், கிராம தொட்டிகள் மூலமாகவும், நன்னீர் வேளாண்மையை பரவலாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் என தெரிவித்துள்ளார்.