அநுரவின் தேர்தல் கால வாக்குறுதிகள்! கேள்வி எழுப்பும் மகிந்த தரப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அவ்வாறான நிலைமையில் வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளை மாத்திரம் எவ்வாறு செயற்படுத்த முடியும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கேள்வி எழுப்பினார்.
மகிந்தவின் சுபீட்சமான ஆட்சி
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் சுபீட்சமான காலப் பகுதியென்றால் அது மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைத்தான் கூறமுடியும். பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதனை யாரும் மறந்துவிட முடியாது. வரவு - செலவுத் திட்டத்தில் எம்மால் குறிப்பிடப்பட்ட அனைத்தையும் நாம் நிறைவேற்றினோம்.
ஆனால், அரசு தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
அவ்வாறான நிலைமையில் வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளை மாத்திரம் எவ்வாறு செயற்படுத்த முடியும்? அவை வெறும் ஏட்டில் மாத்திரமே காணப்படுகின்றன.
மக்களை ஏமாற்றி போலியான வாக்குறுதிகளை வழங்கினார்கள். தற்போது அவ்வாறான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கிறார்கள். இதனை மக்களும் நன்கு உணர்ந்துள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
