பிள்ளைகள் உள்ள பௌத்தரே இந்த நாட்டில் ஜனாதிபதியாக வேண்டும்!சமார சம்பத்
ஜனாதிபதியாக பதவி வகிப்பவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டுமென ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் பற்றி பேச்சு வார்த்தை நடாத்தப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் போது ஜனாதிபதியாக பதவி வகிப்பவர் பௌத்தராக இருக்க வேண்டும், திருமணம் முடித்தவராக இருக்க வேண்டும், அவருக்கு பிள்ளைகள் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
புதிய அரசியல் அமைப்பில் இந்த தகுதிகளை பூர்த்தி செய்பவரே இந்த நாட்டை ஆட்சி செய்ய வேண்டுமென்ற வகையில் சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சில பலவீனமான தலைவர்கள் இருந்தார்கள் எனவும், அவர்களுக்கு பிள்ளைகள் இருக்கவில்லை எனவும், அவ்வாறானவர்களினால் எவ்வித சேவையும் நாட்டு மக்களுக்கு ஆற்றப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உக்ரேய்னிலிருந்து அல்லது செவ்வாய்க்கிரகத்தில் இருந்தேனும் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு கொண்டு வருவது அவசியமானது அதனை சாதகமான முறையில் பார்க்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.