சுகாதார அமைச்சின் அனுமதியின்றி திறக்கப்பட்ட மதுபானக்கடைகள்
சுகாதார அமைச்சின் ஆலோசனையின்றி மதுபானக்கடைகளை திறப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் துணை இயக்குநர், வைத்தியர் ஹேமந்த ஹேரத் இன்று தெரிவித்துள்ளார்.
தொற்று நோயின் தற்போதைய சூழ்நிலைகளில், இந்த முடிவுக்கு ஒரு தர்க்கமோ அல்லது அடிப்படையோ இல்லை என்று அவர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நாடு முடக்கப்பட்ட நிலையில் வணிக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், மதுக்கடைகளை மீண்டும் திறக்கும் முடிவை மன்னிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது, நிலவும் கோவிட் சூழ்நிலையை ஒரு பயங்கரமான நிலைக்கு இழுத்துச் செல்லும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, அதிகாரிகள் இதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். கோவிட் சூழ்நிலையைப் பொறுத்து எதிர்காலத்தில் இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வைத்தியர் ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.