மட்டக்களப்பில் மதில் விழுந்து சிறுவன் பலி! அறபாநகரில் சோகம்
மட்டக்களப்பு மாவட்டம், கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அறபாநகர் கிராமத்தில் மதில் விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதென வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை, நாசீவந்தீவைச் சேர்ந்த சிறுவன், தனது தாய் தொழில் நிமிர்த்தம் சவூதி அரேபியாவுக்குச் சென்ற நிலையில், அறபாநகர் பகுதியிலுள்ள தனது சகோதரியின் வீட்டில் வசித்து வந்த நிலையில், எதிர் வீட்டு மதில் சுவரைப் பிடித்து ஏறுவதற்கு முயற்சித்த போது மதில் சிறுவன் மேல் விழுந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சிறுவனை மீட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் வாழைச்சேனை நாசீவந்தீவு முருகன் ஆலய வீதியைச் சேர்ந்த கோபால் பிறேமசாந் என்ற 13 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
உயிரிழந்த சிறுவனின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.