சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி சிறுவன் பலி!
முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் சட்டவிரோதமான யானைக்கு அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(3.2.2026) இடம்பெற்றுள்ளது.
புளியங்குளம் அலகரை கிராமத்தைச் சேர்ந்த 5 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்பு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுவன் தனது அம்மம்மாவுடன் புல்லு வெட்டுவதற்காக சென்றிருந்த நிலையில், அந்தப் பகுதியில் யானைகளைத் தடுப்பதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிறுவனின் கழுத்து சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக சிறுவன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அவசரமாக ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதைத் தொடர்ந்து, சிறுவனின் உடலம் மேலதிக சட்டவைத்திய விசாரணைகளுக்காக ஒட்டுசுட்டான் வைத்தியசாலையிலிருந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக, குறித்த காணியில் சட்டவிரோதமாக மின்சார வேலியை அமைத்த காணி உரிமையாளர் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல்-சதீசன்