நீர் நிரம்பிய கற்குழிக்குள் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
அம்பாறை - சம்மாந்துறை, செந்நெல் பகுதியில் கற்குழி ஒன்றில் நீராடச்சென்ற சிறுவன் ஒருவன் நேற்று(26) உயிரிழந்துள்ளார்.
சம்மாந்துறை - செந்நெல் பகுதியைச் சேர்ந்த 11 வயதான சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று(26) மாலை நண்பர்களுடன் விளையாடச் சென்ற போது நீர் நிரம்பி காணப்பட்ட பழமையான கற்குழி ஒன்றில் குறித்த சிறுவன் நீராடுவற்காக இறங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் 20 வருடங்களுக்கு முன்னர் கல் அகழ்வு இடம்பெற்று வந்த நிலையில் அந்த குழிகள் முறையாக மூடப்படாது கைவிடப்பட்டதனாலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம்
இதேவேளை நெல்லியடிப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரவெட்டி, கப்பூது பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தோட்டக் கிணற்றில் வீழ்ந்து வயோதிபர் ஒருவர் இன்று திங்கட்கிழமை(27.02.2023) உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பொன்னையாபிள்ளை (வயது- 65) என்பவராவார்.
மேற்படி நபர் பாதுகாப்பற்ற வயல் கிணற்றில் சடலமாக காணப்பட்டமை தொடர்பில் நெல்லியடி பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணை மேற்கொண்டு சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை அறிக்கை சமர்ப்பிக்குமாறு நெல்லியடி பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
மேலும் அப்பகுதியில் பாதுகாப்பற்ற கிணறுகள் காணப்படுவதாகவும் அவற்றை காணி உரிமையாளர்கள் பாதுகாப்பு வேலி அமைத்து பாதுகாப்பானதாக செய்ய வேண்டும் எனவும் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
செய்தி-எரிமலை