பொரளை துப்பாக்கி சூட்டில் பலியான இளைஞன்: பின்னணியில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
பொரளை சிறிசர உயன மைதானத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன், 'குடு சாத்து' என்ற போதைப்பொருள் வியாபாரியின் வலையமைப்பை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
'குடு துமிந்த' எனப்படும் மற்றொரு போதைப்பொருள் வியாபாரியாலேயே குறித்த துப்பாக்கிச் சூடு நேற்று(07.08.2025) நடத்தப்பட்டது.
இதன்போது, உயிரிழந்த இளைஞன், களனியைச் சேர்ந்த 23 வயதுடைய 'பகடயா' எனப்படும் சுரேஷ் மதுஷன் ஆவார்.
அவர் 'குடு சாத்து'வின் போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்தவர் எனவும், சில நாட்களுக்கு முன்பு போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
மேலும் குறித்த துப்பாக்கிச் சூட்டின் போது, காயமடைந்த 21 முதல் 23 வயதுக்குட்பட்ட நால்வரில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிசர உயன மைதானத்தில் இன்று நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்வதற்காக நேற்றையதினம் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள 'குடு சாத்து'வின் சகோதரர், குறித்த இளைஞர்களுடன் அங்கு சென்றுள்ளார்.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாதோர் அவர்கள் மீது T - 56 துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் மாலை திருவிழா



