அம்பாறையில் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை
அம்பாறை - பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை மேற்கு பகுதியில் மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த சடலம் நேற்று(29) பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை மேற்கு பகுதியிலுள்ள விஸ்ணு ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சடலம் மீட்பு
இதனையடுத்து, குறித்த ஆணின் சடலம், அடையாளம் காண்பதற்காக கல்முனை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
முதலை கடித்த நிலையில் ஆணின் சடலமொன்று மிதந்த நிலையில் கிடப்பதாக குளத்தில் மீன் பிடிக்கச்சென்ற கடற்றொழிலாளர்களால் பெரியநீலாவணை கிராமசேவகருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியநீலாவணை பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன்படி, 5 அடி 6 அங்குலம் உயரம் மற்றும் சுமார் 55 வயது முதல் 60 வயது வரை மதிக்கத்தக்க சடலத்தை, பெரியநீலாவணை பொலிஸாருடன் இணைந்து, அம்பாறை தடயவியல் பிரிவு பொலிஸார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் கரைக்கு கொண்டு வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சடலத்தின் வலது கால் பகுதி இல்லாத நிலையிலும் முகத்தின் ஒரு பகுதி சிதைவடைந்தும் காணப்பட்டுள்ளது. இதனால் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவரை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் பொது மக்களின் உதவிகளை நாடியுள்ளனர்.

மேலதிக விசாரணை
கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமைய பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான பி.கஜேந்திரனின் வழிகாட்டுதலில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே, மேற்படி வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பெரியநீலாவணை பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கமான 0718592954 அல்லது 0778911214 என்ற இலக்கங்களுக்கு அறியத்தருமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.