வடக்கில் வெவ்வேறு இடங்களில் மீட்கப்பட்ட சடலங்கள்
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள கடல்
நீரேரியில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று(11) காலை அப்பகுதியில் நீராடச் சென்றவர்கள் சடலமொன்று மிதப்பதாக வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து நீரில் மூழ்கிய நிலையில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஆலயத்திற்கு வந்த முதியவர் நீரேரியில் நீராட முற்பட்ட சந்தர்ப்பத்தில் நீரில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வடமராட்சி
யாழ்.வடமராட்சி, தம்பசிட்டிப் பகுதியில் பூசாரி ஒருவர் தூக்கிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிதம்பரநாதக்குருக்கள் சபாரத்தின தேசியர் (வயது 76) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
வீட்டிலிருந்தவர்கள் வெளியே சென்றிருந்த வேளையில் அவர் தனிமையில் இருந்துள்ளார்.
இதன்போதே அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மரணம் தொடர்பில் பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராசா விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
செய்தி-ராகேஷ்
முகாலை
முகாலை கலோரஸ்ட் அலுவலகத்துக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் சைக்கிள் கடை நடாத்தி வந்த வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
தனது கடையிலிருந்து வேலை நிறைவடைந்து தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோதே குறித்த விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
குறித்த வயோதிபர் அங்கு மரணம் அடைந்துள்ளதாகவும் தற்போது அவரது சடலம் பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி-எரிமலை