கரை ஒதுங்கும் சடலங்கள்: காணாமல் போன உறவுகள் மத்தியில் எழுந்த கேள்வி? (Video)
யாழ். மாவட்ட கடற்கரைகளில் சடலங்கள் கரையொதுங்குவது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகாத நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரமேசந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ் மாவட்ட கரையோரங்களில் கடந்த வாரம் ஆறு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன, இது தொடர்பில் எந்த விதமான தகவல்களும் வெளிவரவில்லை.
கடற்கரைகளில் சடலங்கள் ஒதுங்கி வருகின்றன எனில் கடலில் விபத்துக்கள் நடைபெற்று இருக்க வேண்டும். ஒன்றில் இலங்கை மீனவர்கள், அல்லது இந்திய மீனவர்களினது மீன் பிடி படகுகள் விபத்துக்கு உள்ளாகி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு விபத்துக்கள் நடைபெற்றதாக தகவல் இல்லை.
இதனால் காணாமல் போனவர்களின் உறவுகள் அச்சத்தில் உள்ளனர். ஆனால் அரசாங்கம் எந்த விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை, இந் நிலையில் பொலிஸ் , கடற்படை மீது அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே பொலிஸ் மற்றும் கடற்படை ஆகியவை இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை தீவிரப்படுத்தி, அதன் உண்மை தன்மையான விபரங்களை விரைவாக வெளிப்படுத்த வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.