கொக்கட்டிச்சோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதியில் உள்ள களப்பு பகுதியிலேயே இந்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது ஆறு பெரல் கோடா மீட்கப்பட்டதுடன் உற்பத்திசெய்யப்பட்ட கசிப்பு ஒரு தொகுதியும் மீட்கப்பட்டது. அத்துடன், கசிப்பு உற்பத்தி செய்யும் உபகரணங்களும் மீட்கப்பட்டன.
இதன்போது 10 இலட்சத்து 80 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா மீட்கப்பட்டு அழிக்கப்பட்டதுடன், 20 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டதுடன் இரண்டு காஸ் சிலிண்டர்கள் உட்பட கசிப்ப உற்பத்திகான உபகரணங்களும் மீட்க்கப்பட்டன.
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
இதேநேரம் நேற்று முன்தினமும் முனைக்காடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது களப்பு பகுதியிலிருந்து கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டதாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது நான்கு பரல் கோடா மீட்கப்பட்டதுடன் கசிப்பு உற்பத்திசெய்யும் உபகரணங்களும் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த முற்றுகையின்போது நான்கு பரல்களிலும் இருந்து ஏழு இலட்சத்து 20 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா அழிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.