குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க திட்டம் போடும் நாமல் - சஜித்: கடுமையாக எச்சரித்த பிமல் ரத்நாயக்க
நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகப் பொய்ப் பிரசாரங்களை மக்கள் மத்தியில் கட்டவிழ்த்து விட்டு, அதன் மூலம் குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்றலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் அணியினரும், நாமல் ராஜபக்சவின் தரப்பினரும் பகற்கனவு காண்கின்றனர் என ஆளுந்தரப்பின் முக்கியஸ்தர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடுமையாகச் சாடியுள்ளார்.
அத்துடன், அவர்களின் இந்தக் கனவு ஒருபோதும் நனவாகப் போவதில்லை என்றும் அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பாரிய வீழ்ச்சியில் பொருளாதாரம்
அவர் மேலும் தெரிவிக்கையில், எமது அரசின் மக்கள் நலன்சார் வேலைத்திட்டங்களையும், பொருளாதாரக் கொள்கைகளையும் சகித்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சியினர், மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் பொய்களையும் பரப்பி வருகின்றனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டு தரப்பினரும் தங்களின் அரசியல் வறட்சியை மறைப்பதற்காகவே, நாடு மீண்டும் பொருளாதாரப் படுகுழியை நோக்கிச் செல்வதாகக் கூறி நாடகமாடுகின்றனர்.
மக்களின் உண்மையான தேவைகளைப் புரிந்துகொண்டு, நாட்டின் தூய்மையான நிர்வாகத்துக்காகப் பாடுபட்டு வரும் எமது அரசுக்கு நாட்டு மக்கள் அமோக ஆதரவை வழங்கியுள்ளனர்.
எமது அரசானது நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட, மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு பலமிக்க அரசாகும்.
ஜனநாயக ரீதியில் மக்கள் வழங்கிய இந்த ஆணையை எந்தவொரு அரசியல் சக்தியாலும், பொய்ப் பிரசாரங்களாலும் அசைக்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது. கடந்த காலங்களில் நாட்டைச் சீரழித்தவர்கள் மீண்டும் குறுக்கு வழியில் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைப்பது வேடிக்கையானது. எமது அரசு தூய்மையான பயணத்தை எந்த வித தடங்கலுமின்றித் தொடரும் என்றார்.
போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டு பெற்ற விவகாரம்! சஷி வீரவங்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு