விலை உயர்வு தொடர்பில் அரசு மீள்பரீசிலனை செய்யும்? பாரத் அருள்சாமி (VIDEO)
கோதுமை மா மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்குமாறு நாம் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றோம். இதன்படி விலை உயர்வு தொடர்பில் அரசு மீள்பரீசிலனை செய்யும் என நம்புகின்றோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், பிராஜா சக்தி நிறுவனத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் கலந்து கொண்டு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
கூட்டு ஒப்பந்தம் என்ற விடயப்பரப்புக்குள் சம்பளம் மட்டும் உள்ளடக்கப்படவில்லை. தொழிலாளர்களின் உரிமைசார் விடயங்கள் மற்றும் நலன்புரி அம்சங்களும் அதற்குள் இருக்கின்றன.
இதனால்தான் கூட்டு ஒப்பந்தத்துக்காக நாம் குரல் கொடுத்தோம். ஒரு சந்தர்ப்பத்தில் சம்பள நிர்ணயச்சபை, சம்பளத்தை குறைத்த போதும் கூட கூட்டு ஒப்பந்தம் ஊடாக அதிகரிப்பை நாம் பெற்றுக்கொடுத்துள்ளோம். ஆனால் கூட்டு ஒப்பந்தம் ஊடாக எதையும் செய்ய முடியாது என விமர்சித்தவர்கள், உரிய மாற்றுத் திட்டத்தை முன்வைக்கவில்லை.
பதாதைகளை ஏந்தி, விமர்சனங்களை போராடுவதால் மட்டும் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. தொழிலாளர்களுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு எமக்கு இருக்கின்றது.
தொழிற்சங்க கட்டமைப்பு ஊடாகவே இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அரசியல் அந்தஸ்த்து கூட கிடைத்தது. ஜே.டி.பி நிறுவனத்துடன் தான் எமக்கு பல பிரச்சினைகள் உள்ளன. தொழிலாளர்களுக்கு சேவைகால கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை, மரங்கள் வெட்டப்படுகின்றன, தோட்டங்கள் காடாக்கப்படுகின்றன. இவை தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றோம்.
பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கூட்டு ஒப்பந்தம் இல்லாத நிலையில் முதலாளிமார் சம்மேளனத்துடன் நாம் பேச்சு நடத்தியுள்ளோம்.
இனி மாதாந்தம் அந்த சந்திப்பு நடைபெறும். அதன்போது தொழில் பிணக்குகள் தீர்க்கப்படும். எமது இராஜாங்க அமைச்சர் 2ஆம் திகதி நாடு திரும்புகின்றார்.
அதன்பின் ஜே.டி.பி தலைவருடன் பேச்சு நடத்தி மவுன்ஜின் மக்களுக்கு சிறந்த தீர்வை பெற்றுக்கொடுப்போம்.
கோவிட் நெருக்கடியால் உலகளவில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதன் தாக்கம் தான் எமது நாட்டிலும் எதிரொலிக்கின்றது.
ஆனாலும் கோதுமை மா மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்குமாறு நாம் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றோம். எனவே, அரசு இது தொடர்பில் மீள் பரீசிலனை செய்யும் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.