வெறும் சொல்லாட்சியாக நடைபெற்ற கடந்த கால நல்லாட்சி : வியாழேந்திரன் (Photos)
எந்தவித பிரச்சினையும் இல்லாத சுமூகமான சூழ்நிலையில் நாட்டு மக்களின் விடயங்களை நிறைவேற்றாமல் வெறும் சொல்லாட்சியாகவே கடந்தகால நல்லாட்சி நடைபெற்றது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் மாநாடு இன்று (06) மட்டக்களப்பு - பெரியபோரதீவில் நடைபெற்றது.
இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வேலையற்ற பட்டதாரிகள் வீதியோரங்களில் ஆர்ப்பாட்டங்களளை மேற்கொண்டார்கள், மாவட்டத்திலே உள்ள 410 குளங்களில் 90 சதவீதமான குளங்கள் புணரமைக்கப்படவில்லை. பல அபிவிருத்தித்திட்டங்களுக்கு அடிக்கற்கள் மாத்திரம்தான் நடப்பட்டன எதுவும் நடைபெறவில்லை.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில், எதுவித வீதிக்கட்டுமானங்கள், பாலங்கள், எதுவும் நடைபெற்றிருக்கவில்லை. தங்போதைய பிரதமர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தான் மண்முனைப்பாலம், கல்லடிப்பாலம், மற்றும் வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் திட்டங்கள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனவே கடந்த நல்லாட்சியைப் பாதுகாத்தது தமிழ் தலைமைகளுக்கு பாரிய பங்கு உள்ளது.
தமிழ் மக்களது நீண்டகால மற்றும் குறுகிய காலப்பிரச்சினைகளுக்கும் கடந்த கால அரசாங்கத்தால் தீர்வு வழங்கப்படவில்லை. அபிவிருத்திகளும், மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறு இருந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அப்போது ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தைப் பாதுகாத்திருந்தது.
தற்போது ரணில் விக்கிரமசிங்க மாத்திரம் தேசியப்பட்டியல் ஊடாகவும், 22 உறுப்பினர்களாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு 16 ஆக குறைந்து தற்போது 10 பேர் மாத்திரம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டள்ளார்கள்.

எமது அரசாங்கம் தற்போது 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கியுள்ளது. அதில் மட்டக்களப்பில் மாத்திரம் 2147 பேருக்குக் கிடைத்துள்ளது. அதில் 70 சதவீதமானவர்கள் பெண்கள், ஒரு இலட்சம் கிராமிய வீதிகள் அடிப்படையில் பல பில்லியன் மதிப்பீட்டிலான வீதிகள் புணரமைக்கப்பட்டு வரப்படுகின்றன.
கடந்தவருடம், 88 குளங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாரி சௌபாக்கியா திட்டத்தின் கீழ் புணரமைக்கப்பட்டுள்ளன. அதுபோல் இவ்வருடம் 100 குளங்களைப் புணரமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
அனைத்துப் பிரதேச செயலகங்களிலும் தேசிய பாடசாலைகளை தரமுயர்த்தியுள்ளோம். அரசியல் அதிகாரம் கடந்த காலங்களில் எமது கரங்களில் இருக்கவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பட்டிருப்புத் தொகுதியிலுள்ள மக்கள் சரியாகச் சிந்திருந்தால் ஆளும் கட்சியில் இன்னுமொருவரை நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்திருக்கலாம். இதுபற்றி நாம் எதிர்காலத்தில் சிந்திக்க வேண்டும்.
இயற்கைப் பசளையை இவ்வருடம் விவசாயிகள் பயன்படுத்தியதனால் அறக்கொட்டி இம்முறை இல்லாமல் போயுள்ளது, புற்களின் தாக்கங்கள் குறைந்துள்ளது. அதாவது ஒரு ஏக்கருக்கு, 10 மூடைதான் விளைந்துள்ளது.ஆனால் விளைச்சல் குறைந்துள்ளது.
ஆனால் ஒரு மூடை நெல் 6000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஆனால் தற்காலத்தில் மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருப்பவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படுகின்றார்கள். அனேகமாக மக்களுக்குச் சேவை செய்பவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படுகின்றார்கள்.

வெறும்பேச்சை மாத்திரம் வைத்துக் கொண்டு அவர்கள் காலா கலத்திற்கு மக்கள் பிரதிநிதிகளாக வந்துவிடுகின்றார்கள். அனைவராலும் பேசமுடியும், அதற்கப்பால் நடைமுறைச் சாத்தியமான விடயங்கள் கஷ்டமானதாகும். எதிர்கட்சி உறுப்பினராகப் பயணம் செய்வது இலகுவான விடையமாகும். ஆனால் ஆளும் கட்சியில் இருந்துகொண்டு வேலை செய்வதென்பது கடினமான விடயமாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி தலைவி ச.காந்தரூபி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்கப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார், அக்கட்சியின் தலைமைக் காரியாலயத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய மகளின் ஒருங்கிணைப்பாளர் பாதிமா சிஹானா, உதவி ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் லோஹிஷ்வரி, மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வருகைதந்த பெண்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கதாகும்.





