மட்டக்களப்பு நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தம்
மட்டக்களப்பு மக்களின் நன்மை கருதி நாளை 20.08.2021 ஆம் திகதி முதல் எதிர்வரும் 03.09.2021 வரை நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றாகத் தவிர்க்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (19) திகதி மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான பி.பிறேம்நாத் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
எந்த ஒரு வழக்குகளும் நீதிமன்றத்திலே அழைக்கப்படமாட்டாது என்றும் குறிப்பாக முடக்க வழக்குகளும், அழைப்பு வழக்குகள், தாபரிப்பு வழக்குகள் உட்பட எந்தவிதமான வழக்குகளும் நீதிவான் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட மாட்டாது.
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு ஆஜர்படுத்தப்படுகின்ற வழக்குகள் மாத்திரமே நீதிவான் முன்னிலையில் கொண்டு செல்லப்படும். அந்த சந்தர்ப்பத்திலும் கூட சட்டத்தரணிகள் தங்களுடைய பிரசன்னத்தினை வழங்க முடியாத சூழ்நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே போன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் நடவடிக்கைகளும் மேல் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளும் ஏறாவூர், களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகளும் மட்டக்களப்பு தொழில் நியாய மன்றங்களின் நடவடிக்கைகளும் அவ்வாறே நடைபெறாது என்பதனையும் பொது மக்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் அறியத்தருவதாகத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டா வைரஸ் பிறழ்வு காரணமாக பாரியளவிலான பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வைத்தியர்களின் அறிக்கைகளின் பிரகாரம் அறியக்கூடியதாக இருக்கின்றது.
தற்போதைய சூழல் அசாதாரண சூழலாகச் சென்றுகொண்டு இருப்பதனால் அதனைத் தவிர்க்கும் முகமாக நாங்களும் மாவட்ட மக்களுக்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே நேற்றைய தினம் எமது சட்டத்தரணிகள் சங்கம் கூடி இந்த விடயத்தினை தீர்மானமாக எடுத்திருப்பதாகவும், இதனால் ஏற்படுகின்ற அசௌகரியத்தினை இரண்டு கிழமைகளுக்குப் பொதுமக்களைப் பொறுத்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.




