மட்டக்களப்பில் ஒருவாரத்தில் 143 பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 நாட்களில் 190 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், ஒருவாரத்தில் 143 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று(05) காலை நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது அலையில் 14 நாட்களில் 190 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 143 பேர் கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கோவிட் சிகிச்சை நிலையங்கள் முற்று முழுதாக நிரம்பியுள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்காணப்படும் கோவிட் தொற்றாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டிய நிலையில் உள்ளது.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 30 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களின் 12பேர் களுவாஞ்சிகுடியிலும், 09பேர் மட்டக்களப்பிலும், 05பேர் செங்கலடி பகுதியிலும், 04பேர் காத்தான்குடியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1173கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், இவர்களின் 1020பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.143பேர் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதுவரையில் 10மரணங்கள் ஏற்பட்டுள்ளது. மூன்றாவது அலை காரணமாக ஒரு மரணம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கோவிட் சிகிச்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
காத்தான்குடி, கரடியனாறு, பெரியகல்லாறு ஆகிய இந்த மூன்று வைத்தியசாலைகளும் 400 நோயாளர்களை பராமரிக்கக்கூடிய வகையில் உள்ளன.இந்த மூன்று வைத்தியசாலைகளும் முற்று முழுதாக நிரம்பிய நிலையில் காணப்படுகின்றன.
இதன் காரணமாக புதிதாக அடையாளம் காணப்படுபவர்கள் வெளி மாவட்ட்ங்களுக்கு அனுப்பவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் 1000கட்டில்களை அதிகரிக்குமாறு பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இன்னும் ஒரு வாரகாலத்திற்குள் நூறு கட்டில்களை அதிகரிக்கவுள்ளோம். கோவிட் மூன்றாவது அலையின் காரணமாக ஒட்சிசன் தேவைப்பாடு அதிகளவில் காணப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்சிசன் சிலின்டர்கள் தயார் நிலையில் உள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்சிசன் திட்டம் இல்லாத காரணத்தினால் ஒட்சிசன் தேவைக்காக மகாஓயா, தெகியத்தன்கண்டிய பகுதிகளிலிருந்து ஒட்சிசனை எடுத்து வரவேண்டியுள்ளது. ஒரு ஒட்சிசன் தொகுதியை நிறுவுவதற்கு 42மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது.
அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கோவிட் தொற்றாளர்கள் தீவிரமான நிலையினையடைந்து நியுமோனியாவுக்கு தள்ளப்படும்போது அவர்களைப் பராமரிப்பதற்காக காத்தான்குடி, களுவாஞ்சிகுடி, வாழைச்சேனை போன்ற வைத்தியசாலைகளில் எச்.யு மற்றும் ஐ.சி.யு ஆகியவற்றினை நிறுவவுள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.ஏழு நாட்களில் அவை செயற்பாட்டுக்குவரும் என தெரிவித்துள்ளார்.