பெரியகல்லாறு வைத்தியசாலை கோவிட் நோயாளிகளுக்கான உணவு சிக்கல் தீர்க்கப்பட்டது
மட்டக்களப்பு - கரடியனாற்றில் கோவிட் நோயாளர்களைப் பராமரிப்பதற்கான தற்காலிக வைத்தியசாலையின் அமைப்பு பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதிகரித்து வருகின்ற கோவிட் தொற்றாளர்கள் தொடர்பில் அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ முயற்சியில் இலங்கையில் 18 இடங்களில் தற்காலிக வைத்தியசாலைகள் அமைப்பட்டுள்ளன.
இதனைவிட ஏற்கனவே இவ்வாறு கோவிட் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக பெரியகல்லாறு, காத்தான்குடி, மற்றும் கரடியனாறு வைத்தியசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அது நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் கோவிட் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவில் குறைபாடுகள் உள்ளதாக நாம் அறிந்தோம்.
அதை உடன் அவதானித்து பெரியகல்லாறு வைத்தியசாலையில் தங்கியிருக்கும் கோவிட் நோயாளிகளுக்கு உணவு வழங்கி வந்த ஒப்பந்தக்காரரை நேற்று மாற்றி கரடியனாறு, காத்தான்குடி ஆகிய வைத்தியசாலைகளுக்கு உணவு வழங்கும் அதே ஒப்பந்தக்காரருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இனிமேல் இவ்வாறான குறைபாடுகள் ஏற்படாது என வைத்தியசாலை நிர்வாகம் எமக்கு உறுதியளித்துள்ளது.
ஜனாதிபதி மற்றும் எமது கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்டோர் எம்மை அடிக்கடி சந்தித்து மக்களின் குறிபாடுகள் என்ன, என்ன உள்ளன அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றனர்.
ஆனால் தற்போதைய இக்கட்டான காலகட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா 3 மாத காலம் நாடாளுமன்றத்தில் விடுமுறை பெற்று ஓய்வெடுக்கின்றார்.
தங்கள் தங்கள் உயிரை மாத்திரம் காப்பாற்றுவதற்காக செயல்படும் நபர்கள் குறித்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும்.
மேலும் இதுபோன்றவர்களை தேர்தல்களில் தேர்ந்தெடுப்பது தொடர்பில் மக்கள் நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும்.
கோவிட் தாக்கத்தினால் நடமாட்டத் தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு அரசாங்கம் பிரதேச செயலகங்கள் ஊடாக 5000, 10000 ரூபா பெறுமதியான பொருட்களை வழங்கி வருகின்றது.
இச்செயற்பாடு மட்டக்களப்பு மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மட்டக்களப்பிலுள்ள தனவந்தர்களும், முன்வந்து கோவிட் சிகிச்சைக்குத் தேவையான பொருட்களை வைத்தியசாலைகளுக்கு வழங்கி வருகிறார்கள்.
எனவே சகல துறையினரும் கோவிட் நோயிலிருந்து மட்டக்களப்பு மக்களைப் பாதுகாப்பதற்கு மிகுந்த சிரத்தையுடன் செயற்பட்டு வருகிறார்கள்.
அதேபோல் நாட்டிலுள்ள சகல மக்களையும் ஒரே விதமாக கவனித்து, பாதுகாப்பதற்காக அசர சேவையை எந்தவித சவால்கள் வந்தாலும் திறம்பட அரசாங்கம் மேற்கொள்ளும். என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.