மட்டக்களப்பில் மேலும் 11 பேருக்கு கோவிட் தொற்று உறுதி - வைத்தியர் நாகலிங்கம் மயூரன்
மட்டக்களப்பில் தனியார் வைத்தியசாலையில் நோயாளர் ஒருவர் மற்றும் ஹோட்டல்களில் கடமையாற்றும் 6 பேர் உட்பட மேலும் 11 பேருக்கு அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனை மூலம் கோவிட் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1057 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் தொற்றினையடுத்து தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை (29) எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளிலே இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் இருவர் உட்பட 4 பேருக்கும் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள ஹோட்டல்களில் கடமையாற்றும் 6 பேர் உட்பட 11 பேருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 1057 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் 72 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், 976 பேர் சிகிச்சைபெற்று வெளியேறியுள்ளதாகவும் இதுவரை 9 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார அமைச்சு அறிவித்த சுகாதார வழிமுறைகளைத்
தொடர்ந்தும் பின்பற்றிவருமாறு தேவையில்லாமல் வீட்டிலிருந்து வெளியேறுவதைத்
தவிர்த்துக் கொள்ளுமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.