பிள்ளையானுடன் இருப்பவர்களால் கொலை அச்சுறுத்தல் - ஆசிரியர் சங்கம் பகிரங்க குற்றச்சாட்டு
பிள்ளையான் என அழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் (Sivanesathurai Chandrakanthan) முகநூல் குழுவினர் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொ.உதயரூபன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நாட்டில் பெரும் பேசுபொருளாக அமைந்திருப்பது 24 வருடங்களாக ஆசிரியர், அதிபர்களுடைய சம்பள முரண்பாடு தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் அண்மையில் அமைச்சரவை தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதே.
அதிபர், ஆசிரியர்களுடைய முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையில் இரண்டு மாதங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு ஒன்று வழங்குவதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
ஆனால் தற்போது வெளியாகிய சுற்று நிரூபத்தின் படி நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்குவதாக அறியமுடிகின்றது.
ஆகவே அரசாங்கத்தின் இந்த கொடுப்பனவை ஆசிரியர், அதிபர்கள் முற்றாக நிராகரித்துள்ளதுடன் எழுத்து மூலமாகவும் எமக்கு அறிவித்துள்ளனர்.
அரசாங்கத்தின் இந்த செயற்பாடானது மேலும் மேலும் முரண்பாட்டை அதிகரிக்கும் நோக்கமாகவே பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
உண்மையில் ஒன்றை கூறியேயாக வேண்டும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அண்மையில் அமெரிக்காவில் தெரிவித்த கருத்தும், இலங்கையின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் கருத்தும், இந்த போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என்று கூறுகின்றார்கள்.
ஆனால் எம்மைப் பொறுத்தவரையில் நேரடியாக அச்சுறுத்துவதை எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது. அண்மையில் கூட எனக்கு முகநூல் வாயிலாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த அச்சுறுத்தல் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.
ஆகவே இவர்கள் ஒன்றை கருத்தில் கொள்ள வேண்டும் அச்சுறுத்தல் இல்லை என்று கூற முடியாது. என்னிடம் இருக்கும் ஆவணங்களை நான் காட்டுகிறேன். தொடர்ச்சியாக நான் கொலை மிரட்டலுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றேன்.
பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன். ஆகவே இவற்றுக்கெல்லாம் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் என்ன பொறுப்பு சொல்லப் போகிறார்கள், இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.