51 மில்லியன் ரூபா மட்டுமே மட்டக்களப்பிற்கு ஒதுக்கீடு: சுட்டிக்காட்டும் சாணக்கியன்
கடந்த ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 400 மில்லியனுக்கும் அதிகமான நிதியொதுக்கீடுகளை கொண்டு வந்து தான் அபிவிருத்திகளை செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் 51 மில்லியன் ரூபாவினை மட்டுமே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டம் நேற்று மாலை மகிழுர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத், இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் செயலாளர் கி.துரைராஜசிங்கம், மட்டக்களப்பின் முன்னாள் மாநகர முதல்வர் தி.சரவணபவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.











