மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை - ஒருவர் கைது
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவாங்கேணி பிரதேசத்தில் கயூ தோட்டம் ஒன்றில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை இன்று பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரைக் கைது செய்ததுடன், 2 இலட்சம் மில்லிலீற்றர் கசிப்பு, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மில்லிலீற்றர் கோடா மற்றும் கசிப்பு உபகரணங்களை மீட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.கே பண்டார தெரிவித்துள்ளார்.
மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் ஆலோசனைக்கமைய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.கே பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினமான இன்று பகல் களுவங்கேணி பிரதேசத்திலுள்ள கயூ தோட்டத்தில் உள்ள கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
இதன் போது அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரைக் கைது செய்ததுடன், 2 இலட்சம் மில்லி லீற்றர் கசிப்பு, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மில்லிலீற்றர் கோடா மற்றும் கசிப்பு உபகரணங்களை மீட்டு ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.