காலிமுகத்திடல் வன்முறை! தூண்டியவர்களுக்கு பயணத்தடையை கோரும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்!
காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் ஈடுபட்டவர்களுக்கு பயணத் தடை விதிக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்மொழிந்துள்ளது.
பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், அமைதியை மீட்டெடுக்கவும் அதிகாரிகள் தரப்பில் இது தொடர்பில் உடனடி நடவடிக்கை தேவை என்று சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்
இதன்படி, தமது நோக்கத்துக்காக வன்முறைக் குழுக்களை அலரிமாளிகையில் இருந்து கட்டவிழ்த்துவிடத் தூண்டிய, சதி செய்த மற்றும் வன்முறையில் கலந்து கொண்ட அனைவரையும் சட்டத்தின்கீழ் உடனடியாகக் கைது செய்யுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோருகிறது.
அவர்கள் அரசாங்கத்தில் அல்லது அவர்களது குடும்பத்தினர்; எந்த பதவியில் இருந்தாலும், அதனை கருத்திற்கொள்ளாது இது நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று சாலிய பீரிஸ் கோரியுள்ளார்.
பொலிஸாரால் இவ்வாறானவர்களுக்கு எதிராக உடனடி பயணத் தடைகள் பெறப்பட வேண்டும் என்றும் சாலிய பீரிஸ் கேட்டுள்ளார்
இதேவேளை தனி ஆட்களின் சொத்துக்கள் மற்றும் அரச சொத்துக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளை உடனடியாக நிறுத்துமாறும், அத்தகைய வன்முறையில் ஈடுபடுபவர்களையும் விசாரணை செய்து, கைது செய்து சட்டத்தின்படி கையாள வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.