பசிலின் கனவை தவிடுபொடியாக்கினோம்:அரசாங்கத்தின் பல இரகசியங்களை வெளியிட்ட வீரவங்ச
அரசாங்கம் விரும்பாதவர்களுக்கு பதவிகளை பகிர்ந்த நடைமுறை இருந்ததாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றில் நேற்று ஒளிப்பரப்பான பேட்டி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
விஞ்ஞான அடிப்படையில் அமைச்சு பதவிகள் உருவாக்கப்படும் என கூறினாலும் அப்ப நடக்கவில்லை. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு ஒன்றாக இருக்கும் அமைச்சு பதவி என்றாலும் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவை அரசாங்கம் விரும்பவில்லை என்ற காரணத்தினால், அவருக்கு முதலில் மின்சக்தி துறை மாத்திரம் வழங்கப்பட்டது.
மின்சார சபையை மாத்திரம் அவருக்கு ஒதுக்கி, வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டனர். அவருக்கு கீழே ஒரு ராஜாங்க அமைச்சரை நியமித்து, பல துறைகளை ஒதுக்கினர்.
ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிபுண ரணவக்கவுக்கு டளஸ் அழகப்பெரும சவாலாக இருப்பார் என்பதே இதற்கு காரணம்.
டளஸ் அழகப்பெரும கல்வியமைச்சை பெற விரும்பினார். எனினும் அவருக்கு மின்சக்தி அமைச்சு பதவி வழங்கப்படடது. எனினும் சிறிது காலம் அவர் கல்வியமைச்சராகவும் பதவி வகித்ததுடன் பெரிய மாற்றங்களை செய்தார்.
டளஸ் அழகப்பெரும தொடர்ந்தும் கல்வியமைச்சராக பதவி வகித்து இருந்தால், அதிபர், ஆசிரியர் சம்பளம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டிருக்காது. டளஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொணட மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்.
எனினும் ராஜபக்ச குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அமைச்சு பதவிகள் விஞ்ஞான அடிப்படையில் இருக்கின்றது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சை இரண்டாக பிரித்து உதய கம்மன்பிலவுக்கு எரிசக்தி அமைச்சு பதவி வழங்கப்பட்டது.
அவருக்கு பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகவே பணியாற்ற முடிந்தது. விரும்பம் விரும்பாத என தரம் பிரித்து அமைச்சு பதவிகள் ஒதுக்கப்பட்டன.
ராஜபக்சவினர் அமைச்சர் பந்துல குணவர்தனவையும் விரும்புவதில்லை. அவர் மீது அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு மறைத்து வைத்துள்ள கோபம் ஒன்று இருக்கின்றது.
பந்துல குணவர்தனவுக்கு வர்த்தக அமைச்சர் பதவியை வழங்கினாலும் வணிக திணைக்களத்தை வழங்கவில்லை. இதன் காரணமாக வர்த்தக ஒப்பந்தங்களை செய்ய முடியாத நிலைமை இருந்தது.
இதனால், பந்துல குணவர்தன பல குறைகளை சுட்டிக்காட்டி தனது அமைச்சின் கீழ் வணிக திணைக்களத்தை பெற்றுக்கொண்டார்.
இதேபோல் மேலும் சில அமைச்சர்கள் இந்த விரும்பமில்லாதவர்கள் பட்டியலில் இருக்கின்றனர். அமைச்சர் சீ.பி. ரத்நாயக்கவுக்கு அரச மரக் கூட்டுத்தாபனம் மாத்திரமே வழங்கப்பட்டிருந்தது எனவும் விமல் வீரவங்ச கூறியுள்ளார்.
அதேவேளை கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பசில் ராஜபக்சவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகி வந்தார். அதற்கான ஆடைகளை தயார் செய்து, புகைப்பட கலைஞர்களை அழைத்து புகைப்படங்களையும் எடுத்திருந்தார்.
அவரது இந்த கனவை நான் உள்ளிட்ட சிலரே தவிடுபொடியாக்கினோம். இதன் பின்னரே கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்ற நிலைப்பாடு உருவானது.
அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்வது கோட்டாபய ராஜபக்சவுக்கு சவாலாக இருந்தது. இதனை ஆராய இந்திய வம்சாவளியை சேர்ந்த சட்டத்தரணி ஒருவரை பயன்படுத்திக்கொண்டனர்.
அமெரிக்க சட்ட நிலைமையை நன்றாக ஆராய்ந்த அந்த சட்டத்தரணி, அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்வதில் கோட்டாபய ராஜபக்சவுக்கு தடையில்லை என கூறியதுடன் மற்றைய ராஜபக்சவுக்கு அதற்கான தடை இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
பசில் ராஜபக்சவே அந்த ராஜபக்ச, பணச் சலவை பிரச்சினையே இதற்கு காரணமாக இருந்தது என அவருக்கு நெருக்கமான ஒருவர் என்னிடம் கூறினார் எனவும் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
இதுவரை எவரும் வெளியிடாத இந்த தகவல்களை தான் வெளியிட்டுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தரப்பினர் இதனை மறுத்து அறிக்கை வெளியிடலாம் எனவும் அது பற்றிய விவாதத்திற்கு செல்ல விரும்பவில்லை எனவும் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.