இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பசில் ராஜபக்ச சந்திப்பு
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் (Narendra Modi) சந்திப்பு ஒன்றை நடாத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் (G.L. Peiris) தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியிலாளர் சந்திப்பொன்றிலே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
புதுடெல்லியில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும், இந்த சந்திப்பிற்கான ஆயத்தங்களை இலங்கையும் இந்தியாவும் செய்து வருவதாகவும், இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் என்பன இந்த விஜயம் குறித்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், எதிர்வரும் சில நாட்களில் இந்த சந்திப்பு நடைபெறும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுடன் நெருங்கிய உறவுகள் காணப்படுவதாகவும் ஒரு துறைசார்ந்து கவனம் செலுத்தப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், மேலும் இந்தியாவிடம் கடன் பெற்றுக்கொள்ளும் உத்தேசம் நிதியமைச்சருக்கு கிடையாது என அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இச் சந்திப்பின் போது இந்தியாவிலிருந்து கூடுதலான முதலீடுகளை பெற்றுக்கொள்வதுடன், சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.