நீதிமன்றில் வசமாக சிக்கிக் கொண்ட பசில் - விமான டிக்கெட்டுகளால் அம்பலத்திற்கு வந்த மோசடி
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று இலங்கைக்கு வருகை தர விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்த போதும் அவை ரத்து செய்யப்பட்டதாக மாத்தறை நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறையில் முறைகேடான பணத்தைப் பயன்படுத்தி காணி கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த தகவல்கள் தெரியவந்தன.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைத் தவிர, அவரது மனைவியின் சகோதரி அயூமா கலப்பத்தி, அவரது கணவர் திஸ்ஸா கலப்பத்தி மற்றும் முதிதா ஜெயக்கொடி ஆகியோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
வழக்கு விசாரணை
வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பசில் ராஜபக்ஷ மற்றும் அயூமா கலப்பத்தி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, மேலும் அவர்களின் பிணைத்தாரர்கள் மட்டுமே அவர்கள் சார்பாக ஆஜராகியுள்ளனர்.

பசில் ராஜபக்ஷ சார்பாக ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் அனில் சில்வா, தனது கட்சிக்காரரின் மருத்துவ நிலையை உறுதிப்படுத்தும் பல மருத்துவ அறிக்கைகள் அடங்கிய ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அறிக்கைகளை ஆய்வு செய்த பின்னர் சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, சந்தேக நபரின் மருத்துவ நிலைமைகள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளில் சில முரண்பாடுகள் இருப்பதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
“இந்த வழக்கின் மூன்றாவது சந்தேக நபரான பசில் ராஜபக்ஷ, கடைசியாக 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் திகதி அன்று இந்த வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
அதாவது இந்த சந்தேக நபர் ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் இல்லாததால், இந்த வழக்கு தாமதமாகிறது.
முந்தைய விசாரணையில், சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
மருத்துவ அறிக்கை
அன்றைய விசாரணையின் போது மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பித்த ஜனாதிபதி வழக்கறிஞர், சந்தேக நபர் திடீரென நாற்காலியில் இருந்து விழுந்த விபத்தில் தலை மற்றும் கழுத்தில் நரம்பு காயம் அடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

அன்று சமர்ப்பிக்கப்பட்ட எக்ஸ்ரே அறிக்கைகளின்படி, சந்தேக நபருக்கு எலும்பு முறிவு இல்லை என்பது தெளிவாகிறது. அன்று மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பித்த ஜனாதிபதி வழக்கறிஞர், சந்தேக நபர் இன்று (நேற்று) நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
சந்தேக நபர் நாற்காலியில் இருந்து விழுந்துள்ளார் எனவும், சந்தேக நபர் தலை மற்றும் கழுத்தில் நரம்பு காயத்தால் அவதிப்பட்டு வருகின்றார் என்ற மருத்துவ அறிக்கைகள் ஜோர்ஜ் சிடி என்ற மருத்துவரால் வழங்கப்பட்டன.
எனினும் இன்று, அதே மருத்துவரின் கையொப்பத்தின் கீழ், சந்தேக நபர் இடது பக்கத்தில் உணர்வின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ அறிக்கைகள் ஒரே மருத்துவரால் வழங்கப்பட்டிருந்தாலும், இந்த மருத்துவ அறிக்கைகளின் லெட்டர்ஹெட்கள் முதல் பார்வையில் வேறுபட்டவை. மேலும், ஜோர்ஜ் சிடி என்ற இந்த மருத்துவர் ஒவ்வொரு அறிக்கையிலும் சந்தேக நபரின் அறிகுறிகளை மட்டுமே குறிப்பிட்டு, அவர் விமானப் பயணத்திற்குத் தகுதியற்றவர் என பரிந்துரைத்துள்ளார்.
சந்தேக நபர் விமானத்தில் பயணிக்க தகுதியற்றவர் என்று மருத்துவர் பரிந்துரைத்த போதிலும், சந்தேக நபர் இன்று இலங்கைக்குத் திரும்புவதற்கான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பின்னர் அந்த டிக்கெட்டுகளை இரத்து செய்துள்ளார்.
இந்த மருத்துவர் கடந்த செப்டம்பர் 14,ஆம் திகதி அன்று சந்தேக நபரின் மருத்துவ நிலை, அவர் விமானத்தில் பயணிக்கத் தகுதியற்றவர் என்று பரிந்துரைத்துள்ளார்.
எனினும், சந்தேக நபர் நவம்பர் 18-21 க்கு இடையில் விமானத்தில் இலங்கைக்குத் திரும்புவதற்கான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய செப்டம்பர் 25ஆம் திகதி அன்று ஒரு விமான நிறுவனத்திற்கு மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளார்.
எனினும் சந்தேக நபர் பின்னர் ஒக்டோபரில் அவற்றை ரத்து செய்துள்ளார். மேலும் சந்தேக நபருக்கு விமான நிறுவனம் அனுப்பிய விமானச் சரிபார்ப்பு படிவத்தில், அவர் வேறொரு நபரின் உதவியுடன் வழக்கமாக விமானத்தில் பயணிக்க முடியும் என்று தெளிவாகக் கூறுகிறது.
அந்த படிவத்தில் விமானத்தில் சிறப்பு நாற்காலி, படுக்கை அல்லது ஒக்ஸிஜன் தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.
இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு, சந்தேக நபரின் மருத்துவ நிலை குறித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதால், இது தொடர்பாக ஒரு உத்தரவைப் பிறப்பிக்குமாறு என துணை சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றத்தைக் கோரினார்.
Bigg Boss: கதவை திறக்க பிக்பாஸிடம் கூறிய பிரஜன்... பரிதாப நிலையில் விக்ரம்! வெடிக்கும் சண்டை Manithan